முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டை அறிமுகப்படுத்தியதே தி.மு.க-தான்: முதல்வர்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.22: மின்வெட்டைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.-விற்கு அருகதையே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கைகள் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது விவாதம் நடந்தது. அப்போதுமுதல்வர் ஜெயலலிதா பேசியதாவது :

தி.மு.க. உறுப்பினர் இன்னும் கூடுதலாகப் பேசுவதற்கு நேரம் கேட்டுக்கொண்டிருக்கிறார். தி.மு.க. உறுப்பினர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கிட்டத்தட்ட கடந்த 50 நிமிடங்களாகக் கேட்டோம். அவர்கள் சொன்ன கருத்துகளுக்கு, அமைச்சர் அவர்கள் தெளிவான பதிலை தந்துவிட்டார்கள். திரும்பத் திரும்ப தி.மு.க. உறுப்பினர் சொன்னது, மின்வெட்டு, மின்வெட்டு என்பதைத்தான் திரும்பத் திரும்ப சொன்னார்.

மின்வெட்டைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.-விற்கு அருகதையே இல்லை. (மேசையைத் தட்டும் ஒலி) ஏனென்றால், மின்வெட்டு என்பதை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். (மேசையைத் தட்டும் ஒலி)

நான் இப்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில், 1991 முதல் 1996 வரை மின்வெட்டு என்ற பேச்சுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை. (மேசையைத் தட்டும் ஒலி) அப்போது மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக, மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது. அதைப்போலவே, எனது இரண்டாவது ஆட்சிக் காலம்; 2001 முதல் 2006 வரை, தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. (மேசையைத் தட்டும் ஒலி) அப்போதும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது. அதன்பின்னர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாடு மின் குறை மாநிலமாக ஆக்கப்பட்டு, தமிழ்நாடு இருளில் தள்ளப்பட்டது. (மேசையைத் தட்டும் ஒலி) மீண்டும் 2011-ல் மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தி.மு.க. விட்டுவிட்டுச் சென்ற கடன், சுமை, தி.மு.க. விட்டுவிட்டச் சென்ற மின்வெட்டு என்ற நிலைமை, இவற்றோடு பகீரத முயற்சி செய்து, போராடி இப்பொழுதுதான் நிலைமையைச் சரிசெய்திருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி)

விவசாயிகளுக்கு மின்வெட்டு என்றார்கள்; இரண்டு மணி நேரம்தான் மின்சாரம் தரப்படுகிறது என்றார்கள்; அப்படியில்லை. விவசாயிகளுக்கு 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம், மும்முனை மின்சாரம் - ஜிலீக்ஷீமீமீ றிலீணீsமீ நீuக்ஷீக்ஷீமீஸீt - வழங்கப்படுகிறது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மாண்புமிகு உறுப்பினர் திரு. பெரியசாமி அவர்கள் பேசும்போது, இலவச ஒரு விளக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் தி.மு.க. தலைவர் . கருணாநிதி என்று தெரிவித்தார். இது உண்மைக்கு மாறான தகவல் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு என்ற திட்டத்தை 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) 1979 ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியபோது, மாதம் 2 ரூபாய் 50 காசு எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், அரசாணை எண் 1705, பொதுப் பணித் துறை, நாள் 18-8-1984-ன்படி, இந்தக் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

எனவே, செய்யாத ஒரு செயலுக்கு உரிமை கொண்டாட வேண்டாமென்று தி.மு.க. உறுப்பினரை நான் கேட்டுக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) பேசுவதற்குக் கூடுதல் நேரம் கேட்கிறார்கள். இப்போது சொன்ன, அதே உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லப் போகிறார்கள். ஏற்கெனவே கேட்டு முடித்துவிட்டோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் தெளிவான பதிலுரையை அளித்துவிட்டார்கள். ஆகவே, தாங்கள், தங்கள் விருப்பம்போல தீர்ப்பு அளிக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (குறுக்கீடுகள்).

முதல்வர் ஜெயலலிதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விலைவாசியைப் பற்றியும் தி.மு.க. உறுப்பினர் அவர்கள் பேசினார்கள். அதிக கட்டணம் கொடுத்து இந்த ஆட்சியில் மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என்றும் குற்றஞ்சாட்டினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒட்டுமொத்த விலைவாசி குறைவாக இருந்தபோது, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இப்போது எனது ஆட்சிக் காலத்தில், விலைவாசி மூன்று மடங்கு பெருகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், இந்தச் சூழ்நிலையில், குறைந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றோம் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (குறுக்கீடுகள்)

என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்