முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பொருட்களை செய்திதாளில் மடித்து வழங்க தடை

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பொருட்களை செய்திதாள்களில் மடித்து வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருள்களை பொட்டலமிடுவதற்கும், உணவு பதார்தங்களிலிருந்து எண்ணெய்யினை பிழிவதற்கும் அச்சிடப்பட்ட செய்திதாள்களை பயன்படுத்தும் பழக்கம் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்.  எனவே தினசரி மக்கள் கூடும்; உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பரிமாறப்படுவது மற்றும் பொட்டலமிடுவது இந்திய அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையரகத்தால்  தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வாறு செய்தித்தாள்களில் மடித்து வழங்கப்படும் உணவுப்பொருட்களினால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும். 

தற்சமயம் பழைய செய்தி தாள்கள் மூலம் உணவுப் பொருட்களை சுற்றிக் கட்டுவது, பாக்கிங் செய்வது, அவற்;றில் உணவை உண்ண வழங்குவது ஆகியன அன்றாடம் நடைமுறையில் உள்ளது. சுத்தமான சுகாதாரமான முறையில் உணவை தயாரித்தாலும் கூட செய்தி தாள்களில் வைக்கப்பட்ட இந்த சுகாதாரமற்ற நடைமுறையிலான உணவை உண்பது மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. உணவு பொருளுடன் செய்தி தாள்களில் உள்ள மையானது மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். செய்தி தாள்களில் உள்ள வண்ண மைகளாலும் வேதி அசுத்தங்களாலும் கிருமிகளாலும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.  பெட்டி கடைகள், டீக் கடைகள், உணவு விடுதிகளில் வீடுகளில் கூட வடை போன்ற உணவை செய்தி தாள்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண்பதற்கு சமமாகும்.

செய்தி தாள்களும் கார்டு போர்டு அட்டைகளும் மறுசுழற்சியினால் பெறப்படுபவை. ஆகவே அவற்றில் உலோக அசுத்தங்களும் தீங்கு விளைவிக்கக் கூடிய தாலேட் போன்ற வேதி பொருட்களும் கனிம எண்ணெய்களும் காணப்படுவதால் அஜீரண கோளாறை உருவாக்குவதோடு கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பொருட்களை உணவுடன் பயன்படுத்துவதால் வயதானவர்கள், குழந்தைகள், வளரின பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து கேன்சர் போன்ற நோய்கள் வர காரணமாகின்றன. ஆகையால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் செய்தி தாள்கள் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்யவோ எண்ணெய் பிழியவோ, உண்ணவோ பயன்படுத்தவோ நாடு முழுவதும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

எனவே டீக்கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள் மற்றும் அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில் செய்திதாள் மற்றும் அது தொடர்பான பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யவோ உண்பதற்கு வழங்கவோ கூடாது. அவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம் எனவும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவில் நேரடியாகவோ அல்லது  04567 -231170 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.  மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்