முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அரசு மினிபஸ்: ரூ.10 கட்டணத்தில் 4 மாசி வீதிகளை சுற்றி வரும்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

 மதுரை   - மதுரையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.10 கட்டணத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் 4 மாசி வீதிகளை சுற்றி வரும் மினிபேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.  தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏராளமானோர் தினமும் தரிசனம் செய்கின்றனர். திருவிழா போன்ற விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். ஏற்கெனவே சித்திரை வீதிகள் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கோயில் பாதுகாப்பு கருதி கடந்த சில ஆண்டுகளாகவே சித்திரை வீதிகளில் பெரும்பாலான வாகனங்களுக்கு தடை உள்ளது. 

தயார் நிலையில் 4 பேருந்துகள்
வெளியூர்களில் இருந்து பேருந்துகளில் வரும் பக்தர்கள் சிம்மக்கல், நெல்பேட்டை, பெரியார் நிலையம், விளக்குத்தூண், டிஎம்.கோர்ட் உட்பட வெளிவீதிகளில் இறங்கி நடந்தும், ஆட்டோக்களிலும் செல்கின்றனர். இந்நிலையில், கோயில் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் மாசி வீதிகளில் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம் சார் பில், முதன்முறையாக மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இவை மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் அரசு சார்பில், முதன் முதலாக இயக்கப்படும் இந்த மினிபேருந்துகள் இன்னும் ஓரிரு நாளில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்: ஏற்கெனவே பக்தர்களுக்கென பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நகர் பேருந்து ஒன்று நகைக்கடை பஜார் வரை இயக்கப்படுகிறது என்றாலும், போக்குவரத்து நெருக்கடியால் சில நேரத்தில் சிரமம் இருக்கிறது. இது போன்ற சூழலை கருத்தில் கொண்டு நான்கு மாசி வீதிகளிலும் வட்டப் பேருந்து போல் சுற்றிவரும் வகையில் மினிபேருந்துகளை இயக்க நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 4 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவையைப் பொருத்து இவை அதிகரிக்கப்படலாம். தற்போது மாசி வீதிகளில் மட்டுமே இவை இயக்கப்படும். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுத்தப்படும். பக்தர்கள், பொதுமக்கள் எந்த இடத்திலும் நிறுத்தி மினிபேருந்தில் ஏறி பயணிக்கலாம். கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக அருகில் இறங்கிக் கொள்ளலாம். இதற்கு

ரூ.10 மட்டும் கட்டணம்.
ஒருவழி பாதையான மாசி வீதிகளில் சிம்மக்கல் பகுதி, தேர் நிறுத்தம் உட்பட குறிப்பிட்ட இடங்கள் தொடக்க பகுதியாக நிர்ணயிக்கப்படும். வயதான, வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது வசதியாக இருக்கும். இதன் தொடக்க விழா ஓரிரு நாளில் நடைபெறும் என்றார் அந்த அதிகாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்