முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : கள்ளழகர் ஆற்றில் 10-ம் தேதி இறங்குகிறார்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  மதுரை நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக சுவாமி சன்னதி முன்பு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் காலை 9.50 மணி அளவில் மீன் லக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அங்கு மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கொடியேற்றப்பட்ட பின்னர் தீப, தூப ஆராதனைகள் நடந்தன. நேற்று இரவு 7 மணி அளவில் சுமாமி, பிரியாவிடை கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

இந்த விழா மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் எழுந்தருளும் 400-க்கும் மேற்பட்ட மண்டபங்கள் முன்பு பந்தல்கால் நடும் பணி தொடங்கியது. முன்னதாக நூபுர கங்கையில் நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டு தண்ணீர் பீய்ச்சுவதற்காகவும், தீப் பந்தம் எடுப்பதற்காகவும், சாமி ஆடுவதற்காகவும் விரதத்தை தொடங்கினர்.வருகிற 6-ம்  தேதி அழகர் கோவிலில் திருவிழா தொடங்குகிறது. 7-ம் தேதியும் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும். 8-ம்  தேதி மாலை 7 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். 9-ம்  தேதி அதிகாலையில் புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். 10-ம் தேதி (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

11-ம்  தேதி சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுவார். தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிப்பார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் விடிய விடிய நடைபெறும். 12-ம் தேதி அதிகாலையில் மோகன அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தருவார். 13-ம் தேதி அதிகாலையில் அங்கிருந்து பிரியா விடைபெற்று அழகர் திருமலை நோக்கி செல்கிறார். அன்றிரவு அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் காட்சி தருகிறார். 14-ம்  தேதி காலையில் கள்ளழகர் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருகிறார். 15-ம்  தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்