முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பான எதிர்காலத்திற்கு தரமான கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்!

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

பள்ளிப் படிப்பின்போதே தங்களது இலக்கை நிர்ணயிக்கும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவருவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், எதிர்காலம் குறித்த எந்தவித எண்ணமும் இல்லாமல், என்னென்ன படிப்புகள் உள்ளன? எந்த படிப்பு தனக்கு உகந்தது? எந்த கல்லூரியை தேர்வு செய்வது? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் காண முடியாமல் தவிக்கும் மாணவர்களையும் காணமுடிகிறது. அத்தகைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராகவும் இருக்கலாம்.

பெரும்பாலும், பாடப்பிரிவை விட சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவே மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரிதும் திணறுகின்றனர். மதிப்பெண் மற்றும் தேவையைப் பொறுத்து, ஒரு கல்லூரியை தேர்வு செய்தாலும், சில முக்கிய அம்சங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் -  பொதுவாக, கல்வி நிறுவனம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டுக்கும் தனித்தனியே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அது குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கவும் வேண்டும். கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு அங்கீகாரம் பெற்று அது சார்ந்த வேறு சில படிப்புகளையும் உரிய அங்கீகாரம் பெறாமல் வழங்க வாய்ப்பு உண்டு. எனவே, ஒரு கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்யும் முன்பாக மத்திய, மாநில அரசு மற்றும் அமைப்புகளால் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று பார்த்தல் அவசியம். உதாரணமாக, தொழில்நுட்பப் படிப்பு எனில் ஏ.ஐ.சி.டி.இ., மருத்துவப் படிப்பு எனில் இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவம் எனில் இந்திய பல்மருத்துவக் கவுன்சில், கலை மற்றும் அறிவியல் படிப்பு எனில் உரிய பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் - சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது நீங்கள் தேர்வு செய்யவிரும்பும் கல்லூரி மற்றும் துறையில், பிஎச்.டி., அல்லது எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை எத்தனை ஆசிரியர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவசியம் பார்க்க வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள் - தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதிகள் போன்ற வசதிகளும் ஒரு கல்லூரியின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.

வேலைவாய்ப்பு - இன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோரும், மாணவர்களும் வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் கல்லூரிகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கல்லூரிகள் தங்களது பெருமைக்காக பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அந்நிறுவனங்கள் எப்போதோ, பெயரளவில் அங்கு வளாக நேர்காணலை நடத்தி இருக்கலாம். எனவே, ஆண்டுதோறும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்வது உகந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம். உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்கலாம்.

பாடத்திட்டங்கள் - ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். தொழில் நிறுவனங்களுடனான உறவு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், பிற திறன் வளர்ப்பு சார்ந்த பயிற்சி திட்டங்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்ற அம்சங்களையும் அறிந்து கொள்வது சிறந்தது.

இந்த அம்சங்கள் தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல். இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, வருங்காலத்தை வசந்தமாக்க வாழ்த்துக்கள்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்