முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லில் நோய் தாக்குதல் அறிகுறி : உடனடி மேலாண்மை தேவை

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

தற்பொழுது குள்ளம்பட்டி, பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி கிராமங்களில் வயல்களில் நெற்பயிர் வளர்ச்சி குன்றியுள்ளது. இதனை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனர். நெற்பயிர் வளர்ச்சி குன்றியுள்ளது. மேலும் இலையுறை அழுகல் நோயின் தாக்குதலும் அதிகரித்து காணப்படுகிறது.

இப்பயிர் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.கீதா மற்றும் உதவி பேராசிரியர் (உழவியல்) மா.விஜயகுமார் ஒருங்கிணைந்த நிர்வாக முறைகளை பற்றி விளக்கியுள்ளனர். ஆய்வு செய்த வயல்களில் பச்சைபாசி அதிகம் படர்ந்து காணப்பட்டது.

இதனால் மண்ணில் காற்றோட்டம் தடைபடுவதுடன் மண்ணில் ஹைட்ரஜன் சல்பைடு வாயுக்களின் அளவு அதிகம் உற்பத்தியாகி ஒருவித துர்நாற்றத்துடன் காணப்பட்டு பயிர் வேர்வளர்ச்சி தடைபட்டு பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டது. மேலும் இதுவே இலையுறை அழுகல் நோய் தாக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த 1 கிலோ காப்பர் சல்பேட் (மயில்துத்தம்) மற்றும் சுட்ட சுண்ணாம்பு 1 கிலோவை நன்கு பொடி செய்து கலந்து ஒரு ஏக்கரில் இட்டு பின்பு நன்கு மிதித்து விடவும். பின் மறுநாள் நீரை வடித்து விடவும். இதனால் மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு புதிய வேர்கள் உற்பத்தியாகி செழித்து வளர்ந்து அதிக மகசூல் பெற ஏதுவாக அமைகிறது.

இலையுறை அழுகல் நோய் தாக்கம் அதிக ஈரப்பதம் மற்றும் அடர்த்தியான பயிர் வளர்ச்சி நிலைகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்நோய் பொன்னி இரகங்களில் அதிகம் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நோய் இலையுறையில் நிறமாற்றம் ஏற்பட்டு இளம் கதிரை சுற்றியிருக்கும் இலையுறையில் அழுகல் ஏற்படுத்தியுள்ளது.

அடர் சிவப்பு கலந்த பழுப்பு நிற ஓரங்களுடன் சாம்பல் நிற மையத்துடனும் கூடிய ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படுகிறது. தீவிர தாக்குதலின் பொழுது முழு கதிர் அல்லது அதன் சில பகுதிகள் வெளிவராமல் தடுத்து இலையுறைக்குள்ளேயே இருக்கச்செய்து விடும். இதனால் வெளிவராத கதிர் அழுகி பழுப்பு நிறமாகவும், பின் கருமையாக மாறி விடுகிறது. கதிர்விடும் பருவம் முதல் நெற்பயிர் முதிர்ச்சி அடையும் நிலை வரை இந்நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் இடுவதன் மூலம் கதிர் அழுகல் நோயை 20 முதல் 40 சதவீதம் வரை குறைக்கலாம். நோய் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் உள்ளபொழுது நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு 1 ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடுவதன் மூலமும், திரவ வடிவ சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் 2 மில்லி 1 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து இலைவழியாக தெளிப்பதன் மூலமும் உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்.

நோய்த்தாக்கம் தீவிரம் அடைந்த நிலையில் ஹெக்சகோனோ சோல், கார்பன்டசிம், எடிபென்ஃபாஸ், மேன்கோசெப் (அ) குளோரோதலோனில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து