முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகாசம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 219 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆகாசம்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இம்முகாமில் கலெக்டர் இல.சுப்பிரமணியன், கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் இந்து-இருளர் சாதிச்சான்று 31 பயனாளிகளுக்கும், 2 பயனாளிகளுக்கு கால்நடை இறப்பு நிவாரணத் தொகையாக ரூ.33,000-மும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 30 பயனாளிகளுக்கும், முதிர்கன்னி உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள் சான்று 1 பயனாளிக்கும், காசநோயாளி உதவித்தொகை 8 பயனாளிகளுக்கும், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) 47 பயனாளிகளுக்கும், பட்டா (உட்பிரிவு) 31 பயனாளிகளுக்கும், பட்டா (முழுபுலன்) 10 பயனாளிகளுக்கும், விதவைச்சான்று 1 பயனாளிக்கும், வாரிசுச்சான்று 1 பயனாளிக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.10,57,880-மும், வேளாண்மைத்துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.1,09,630- மதிப்பீட்டில் விவசாயக் கருவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பாக 22 பயனாளிகளுக்கு ரூ.18,48,700- மதிப்பீட்டில் விதைகள் மற்றும் விவசாயக் கருவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 1 பயனாளிக்கும் சலவைப் பெட்டி என மொத்தம் 219 பயனாளிகளுக்கு ரூ.30,49,210- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன், விழாவில் தலைமையுரையாற்றினார்

பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற நேரடியாக துறை சார்ந்த அலுவலர்களையோ அல்லது வாரந்தோறும் திங்கள் தினங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்திலோ, இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமிலோ மனுவாக அளித்து அரசு நலத்திட்ட உதவிகளை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக மனுக்களை அளித்து பயன்பெறுவதே இந்த அரசின் நோக்கமாகும்.  மேலும், இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக அரசு அலுவலர்களை சந்தித்து, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுவதால், இடைத்தரகர்களிடமிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.  இங்கு நுண்ணீர் சொட்டு நீர் பாசம் மூலம் அதிக அளவில் விவசாயம் செய்ய, வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.  இவ்வருடம் 2017-18ஆம் ஆண்டு நுண்ணீர் சொட்டு நீர் பாசனம் மூலமாக 41,000 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.318 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, 30,000 ஏக்கர் நிறைவுபெற்று, 10,000 ஏக்கர் பணிகள் நிலுவையில் உள்ளது.  வானூர் வட்டத்தில் மட்டும் 250 ஏக்கர் நுண்ணீர் சொட்டு நீர்பாசனம் மூலம் பயிர் செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த குறியீட்டிற்கு மேல் பயிர் செய்ய, அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் உள்ளது.நுண்ணீர் சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்ய குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெருவிவசாயிகளுக்கு 70 சதவீத மானியமும் அரசு வழங்குகிறது.  மேலும், வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.353- காப்பீடு செய்தால், ஒரு ஏக்கர் பயிர் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.23,500- விவசாயிகளுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த வருடமும் நமது மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கம்பு, பருத்தி, மக்காச்சோளம், மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்து கொள்ளலாம்.  இதற்கான காப்பீட்டு கட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு முகவர்கள் மூலம் பெறப்படுகிறது.  இந்த வருடம் விவசாயிகளின் நலன் கருதி தற்பொழுது அரசால் புதியதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி காப்பீட்டு கட்டணம் செலுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை அணுகுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன், விவசாய பெருமக்களை கேட்டுக்கொண்டார்.விழுப்புரம் மாவட்டத்தை திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.  எனவே உடனடியாக கழிப்பறை இல்லாதவர்கள், அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து, தனிநபர் கழிப்பறை கட்ட விண்ணப்பித்து அரசு வழங்கும் ரூ.12,000- நிதியுதவி பெற்று உடனடியாக தனிநபர் கழிப்பறைகளை கட்ட கேட்டுக்கொள்கிறேன். மேலும் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.  இதற்கான உறுதிமொழியினை அனைவரும் ஏற்க வேண்டும்.  பெண் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பள்ளிக்கல்வித்துறை அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி அனைவரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய அனைத்துத் துறைகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாக்கடைகளில் உருவாகும் கொசுக்கள் கடிப்பதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.  ஒரு வாரத்திற்கு மேல் வீட்டில் தண்ணீர் தேங்க விடக்கூடாது. 10 மி.லி. தண்ணீர் இருந்தாலே ஏடிஎஸ் கொசு உருவாவதற்கு போதுமானதாகும். உரல், தேங்காய் ஓடு, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிரிட்ஜ் பின்புறம் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறையினால் பரிசீலித்ததன் வாயிலாக பயனாளிகளுக்கு இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  இன்றைய தினத்தில் அதிக அளவில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாகவே இம்மனுக்களை கொடுத்திருந்தால், சம்மந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு, இவர்களுக்கும் இன்றைய தினத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக அமைந்திருக்கும்.  எனவே, இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு 30 நாட்களுக்குள் மனுக்கள்மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.இம்முகாமில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கே.சரஸ்வதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரஞ்சனி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அருனாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜேந்திரன், துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்திரி சுப்பிரமணி, உதவி இயக்குநர் (நிலஅளவை) சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், வேளாண்மை அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து