முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்ப்பாடு பணிகள்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று(16.01.2018) ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது.

ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற கூலமேட்டில் நாளை தினம் (17.01.2018) ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காவல்துறை அலுவலர்கள் போதுமான காவல் ஏற்பாடுகள் செய்யவும், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையாளர் மாடம், தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் ஜல்லிக்கட்டில் 585 மாடுகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அறிக்கை அனுப்பவும், ஜல்லிக்கட்டு நடத்துவதை கண்காணிக்க வருவாய்த்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, காவல்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளை கொண்ட அமைப்பினை கோட்ட அளவில் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிககப்படவும், அக்காளைகள் ஊக்குவிப்பு மருந்துகளோ போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத்திடல் அருகில் போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர் பகுதிகளை ‘மரக்கவசம்’ அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர் மூலம் கூர்மழுங்கச் செய்யவும், காளைகள் விளையாட்டில் பங்கேற்குமுன் ஓய்வாக இருக்க கட்டுத்துறை, தண்ணீர் வசதி செய்து காளைகளின் திடக்கழிவு மற்றும் சிறுநீர் கழிவுகளை அகற்ற போதுமான ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காளைகளின் மிளகாய்ப்பொடி தடவுதல், சகதி தடவுதல், மூக்குப்பொடி தடவுதல் போன்ற தகாத செயல்களால் அவைகளை வெறியூட்டச் செய்யாதிருத்தலை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்னர் 20 நிமிடத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தப்படுவதுடன் மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் இட வசதியுடன் 100 மீட்டர் நீலத்திற்கு அமைக்கப்படவேண்டும். மாடு அடையும் பகுதி மாடு ஒன்றிற்கு 60 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கண்ட பகுதியில் மாடுகளுக்குத் தேவையான தண்ணீர், தீவனம், மற்றும் நிழலுக்காக துணிப்பந்தல் அல்லது கூரையால் வேயப்பட்ட பந்தல் போன்ற வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பாதுகாப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் காவல்துறையினரால் உறுதி செய்திடவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முழுவதுமாக கால்நடை பராமரிப்புத் துறையினரால் முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் விதிமுறைகளின்படி அந்த காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளை கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித்துறையினரிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்கவும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவி குதித்து வரா வண்ணம் குறைந்த பட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்கவும், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைப்பாளர்கள் மேற்கண்ட நெரிமுறைகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், வருவாய் கோட்டாட்சியர் செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லோகநாதன், கால்நடை கண்காணிப்பாளர் மரு.தேவேந்தரன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து