முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (25.01.2018) தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

இப்பேரணியானது காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம், கீழ வீதி, அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் நிறைவடைந்தது. இப்பேரணியில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, பான் சேக்கர்ஸ் மகளிர் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக, பாரத் கலைக்கல்லூரி, அன்னை வேளாண்கன்னி கலைக்கல்லூரி, கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக்கல்லூரி, நேஷனல் பார்மா நர்சிங் கல்லூரி, கிரின்லேன்ட் கேன்டரிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 1500 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அரண்மனை வளாகம் சங்கீத மகாலில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளுக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்று மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் பங்கு சிறப்பானதாகும். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் பொழுது அந்நிகழ்ச்சியானது சிறப்பாக அமையும். மாணவ மாணவியர்களுடன் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்திய ஜனநாயக நாட்டில் தேர்தல் ஆணையத்தினால் நடத்தப்படும் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக சட்ட மன்றத்திற்கும், பாரளுமன்றத்திற்கும் பங்கு பெறலாம்.

முன்பு பெண்களுக்கு ஏழை எளியோர்களுக்கும் வாக்கு அளிக்கும் உரிமை இல்லாமல் இருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறி அனைவருக்கும் வாக்கு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே போல் திருநங்கைகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. நமது தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 19 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 72 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர். அவர்களும் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

நாம் அனைவரும் ஜனநாயகம் தழைத்தோங்க நேர்மையாக வாக்களிக்க வேண்டும். நாம் வீட்டில் உள்ள அனைவரும் தேர்தலில் வாக்களித்து பங்கு பெற அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகளுக்கு நினைவு பரிசுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், நகராட்சிகள் மண்டல இயக்குநர் மற்றும் ஆணையர் (பொ) காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் இந்துபாலா, துணை கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம், ரெட்கிராஸ் செயலாளர் முத்துக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து