முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் நிலை தெப்பத்தில் எழுந்தருளினர் தெப்பத்திருவிழாவில் பக்தர்கள் தரிசனம்

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் நேற்று நிலை தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதங்கள் தோறும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தை மாத தெப்பத்திருவிழா கடந்த 20 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கதிர் அறுப்பு திருவிழா சிந்தாமணியில் நடைபெற்றது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தெப்பத்திருவிழாவின் 12 - வது நாளான நேற்று சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடை ஆகியோர் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்தருளினர். சுவாமி வெள்ளி சிம்மான வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்திலும் புறப்பட்டு அம்மன் சன்னதி, கீழமாசிவீதி, யானைக்கல், நெல்பேட்டை, முனிச்சாலை, காமராசர் சாலை வழியாக மாரியம்மன் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலை அடைந்தனர். தெப்பக்குளத்தின் மேலரதவீதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நிலை தெப்பத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். அப்போது அங்குள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
சந்திரகிரகணத்தையொட்டி மாலையில் நடைபெறும் தெப்பத்திருவிழா நேற்று காலையிலே நடத்தப்பட்டது. தெப்பத்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து