முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 வருடங்களுக்கு மேல்முறையீடு கிடையாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கியம்சங்கள்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நேற்று வெளியிட்ட தீர்ப்பில் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர். தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 284.75 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்துக்கு நிலத்தடி நீர் இருப்பதை நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும், நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் - மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924- ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் 14 டி.எம்.சி தண்ணீரில் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு 4 டி.எம்.சியும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டி.எம்.சியும் வழங்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து