முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி எந்த காலத்தில் காவிரி நீரை பெற்றுத்தந்தார்?- மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் கேள்வி

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, காவிரி பிரச்சினையில் ஸ்டாலின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், கருணாநிதி எந்த காலத்தில் காவிரி நீரை பெற்றுத் தந்தார்? என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து பதிலளித்தார். அப்போது அவர், தீர்ப்பின் முழு விவரமும் உள்ளே இருக்கக்கூடிய ஷரத்துக்கள் எல்லாம் அரசுக்கு முழுமையாக வரப்பெற்றபின் அரசின் கருத்தை தெரிவிக்கிறோம் என்றார். மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது என்று தீர்ப்பு வந்துள்ளதே என்று கேட்ட போது, ஆமாம், ஜெயலலிதா காவிரி நீரை பெறுவதில் எவ்வாறெல்லாம் கடும் முயற்சிகள் மேற்கொண்டார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் விசாரணை 17 ஆண்டுகாலம் முடிந்து உடனடியாக 2007-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக ஜெயலலிதா இது பற்றி கூறும் போது, 17 ஆண்டுகள் போராடி பெற்ற இறுதி தீர்ப்புக்கு முழு அதிகாரம் பெறப்பட வேண்டும் என்றால், மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்றார்.

தி.மு.க எந்தக்காலத்தில் காவிரி நீரை பெற்றுத்தந்தது? உரிமையை பெற்றுத் தந்தது? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்புத்தான் 2007-ல் வந்தது. அதை அரசிதழில் வெளியிட, அரசாணையை பெற்றுத் தர கூட இவர்களால் முடியவில்லை. - ஓ.பி.எஸ்.

மேலும் அப்போது ஆண்டு கொண்டிருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் அரசுகளுக்கு மத்திய அரசின் அரசிதழில் தீர்ப்பை வெளியிட செய்யும் பொறுப்பு உள்ளது. 24 மணி நேரத்தில் அதை உடனடியாக வெளியிட வேண்டும், மேற்கொண்டு நீர் எங்களுக்கு பற்றாகுறையாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதா அப்போது வலியுறுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார். இது 2007-ல் நடந்தது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கெஜட்டில் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

ஆனால் 2013 வரை காங்கிரஸ் அரசு அதை செய்யத் தவறியதால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்று சுப்ரீம் கோர்ட்டை நாடி சட்டப்போராட்டம் நடத்தித்தான் வெற்றி பெற்றார். அப்போது தஞ்சையில் அவர் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இது தன்னுடைய 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையின் வெற்றி என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் ஒவ்வொரு முயற்சியிலும் காவிரி நீரை பெறுவதில் நம்முடைய உரிமையை காவிரி நீரை டெல்டா விவசாயிகளுக்கு கொண்டு வந்து சேர்த்ததில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டார் என்பது வரலாறு. அவர் நடத்திய சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ளே இருக்கும் பிரச்சினைகள், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அரசின் சார்பில் அறிக்கை அளிப்போம். 177.25 டி.எம்.சி நீர் அளிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி அந்த நீரை தமிழக மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டு அந்த நீரை பெறுவோம் என்று தெரிவித்தார் ஓ. பன்னீர் செல்வம்.

தி.மு.க தலைவர் கருணாநிதி பெற்றுத்தந்த காவிரி நீரை கைவிட்டு விட்டதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கூறி உள்ளாரே? என்று கேட்ட போது,

தி.மு.க எந்தக்காலத்தில் காவிரி நீரை பெற்றுத்தந்தது? உரிமையை பெற்றுத் தந்தது? உங்கள் கேள்வியே தவறு. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்புத்தான் 2007-ல் வந்தது. அதை அரசிதழில் வெளியிட, அரசாணையை பெற்றுத் தர கூட இவர்களால் முடியவில்லை. மத்தியில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி அரசும் மாநிலத்தில் தி.மு.கவும் தான் ஆட்சியை ஆண்டார்கள். ஆனாலும் அரசாணையைக்கூட பெற்றுத்தர இயலாத அரசாகத்தான் இவர்கள் ஆண்டார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து