முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை: கலீதா ஜியா மேல்முறையீடு

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டாக்கா, ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா  மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

டாக்கா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடனும், தேர்தலில் தம்மைப் போட்டியிட முடியாமல் செய்வதற்கும் தன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கலீதா ஜியா குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மனுவை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப்.22) பரிசீலிக்கலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கலீதாவின் வழக்குரைஞர்களில் ஒருவரான சாகிர் ஹுசைன் கூறுகையில், 'மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றம் தேதி குறித்த உடனேயே, கலீதாவை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

'ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.52 லட்சம் டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கலீதா ஜியாவுக்கு இந்த மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்பால், இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை கலீதா ஜியா இழக்கக் கூடும் என்பதால் இது அவருக்கு ஒரு மாபெரும் அரசியல் பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து