முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் சென்னையில் வானிலை மைய இயக்குனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது. இது லட்சத்தீவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும். தென்தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக பாபநாசத்தில் 4, தொண்டியில் 2 செ.மீ. மழை பதிவானது. தென்தமிழகம், குமரி, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலில் காற்றின் வேகம் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும்  என்று தெரிவித்தார்.

தெற்கு வங்கக் கடலில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கு....

இதற்கிடையே, தென் தமிழகம், குமரி, மாலத்தீவு பகுதிக்கு மேலும் 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  மாலத்தீவிற்கு வடகிழக்குப் பகுதியில் 290 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டிருக்கிறது. அது மேலும் வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தெற்கு கேரள கடற்பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவு கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த சூறாவளி காற்று

மன்னார் வளைகுடா பகுதியில் 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பல இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.  இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் சீறி எழுந்தன. இதனால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதியதில் சில படகுகள் சேதமடைந்தன.

புயல் எச்சரிக்கை கூண்டு

வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் பெய்த மழையால் இப்பகுதியில் பல மாதங்களாக வீசிக்கொண்டிருந்த வெப்பக்காற்று மாறி குளிர்ந்த காற்றாக வீசியது. ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 600 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடித்து இருப்பதால் நேற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ராமேசுவரம்,  பாம்பன், தனுஷ்கோடியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் மீன் பிடிப்பதற்கான டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து