முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா. ஜனதா தயவு இல்லாமல் தமிழகத்தில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது - தமிழிசை பேட்டி

புதன்கிழமை, 14 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : பாரதிய ஜனதா தயவு இல்லாமல் தமிழகத்தில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அரசியல் நாகரீகமற்ற செயலை கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நேரில் ஆறுதல்

தேனி மாவட்ட மலைப்பகுதியில் சுற்றுலா சென்ற கவுந்தப்பாடியை சேர்ந்த புது மாப்பிள்ளை விவேக் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் மலைப்பகுதியில் நடந்த தீ விபத்தில் பலியானார்கள். தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிக்கு வந்தார். பின்னர் தீ விபத்தில் பலியான புதுமணத் தம்பதிகளின் வீட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்றார். அங்கு இருந்த விவேக் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இதே போல் தீ விபத்தில் பலியான விவேக்கின் நண்பர் தமிழ்செல்வன் வீட்டுக்கும் தமிழிசை சென்றார். அங்கு தங்களது ஒரே மகனை இழந்து வாடும் தமிழ்செல்வன் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து ஈரோடு வந்த தமிழிசை, அங்கு நடந்த பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

கன்னியாகுமரி பகுதியில் கடலுக்கு சென்ற 500 மீனவர்கள் மீண்டும் கரைக்கு வரவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறது. --- தமிழிசை

ஊழலற்ற ஆட்சி

தமிழகத்தில் நான், தமிழ் தாமரை யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்கிறேன். பொதுமக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. ஈரோடு எனக்கு 20-வது மாவட்டம் இங்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் நாகரீகமான அரசியலை முன் எடுத்து செல்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். எங்களால் மட்டுமே ஊழலற்ற வளர்ச்சியான நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.

தமிழகம் தலைநிமிருமா?

இன்று புதியவர்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் எதற்கு வருகிறோம் என்று தெரியாமல் வருகிறார்கள். நாளைய தினம் கூட தினகரன் புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக அறிவித்து உள்ளார். இன்னும் சிலர் தமிழகத்தை தலை நிமிர செய்ய வருகிறோம் என்கிறார்கள். சிறைக்கு சென்றவர்கள் படத்தை வைத்து கொண்டு வருகிறார்கள். இவர்களால் தமிழகத்தை எப்படி தலை நிமிர செய்ய முடியும்.

எப்படி சேர்த்தார்கள்

கமல்ஹாசன் கட்சியில் இருந்து என்னை உறுப்பினராக சேர்ந்து கொண்டேன் என்று கூறியதாக சொன்னேன். நான் ஒரு தேசிய கட்சிக்கு மாநில தலைவர் என்னை எப்படி அவர்கள் கட்சியில் சேர்த்தார்கள்? என்று தெரியவில்லை. முதலில் அவர்கள் தவறை ஒத்து கொள்ள வேண்டும். தவறு நடந்து விட்டது. அதை பார்த்து கொள்கிறேன் என்பது தான் ஆரோக்கியமான வி‌ஷயம் ஆகும். சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று. அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்கள்.

அரசியல் நாகரீகம்

அதில் அவர்கள் எனது போன் எண்ணில் கரியை பூசி விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு உங்களது பழைய முதலாளி என்றும் கூறி இருக்கிறார்கள். இது என்ன வார்த்தை? என்ன அரசியல் நாகரீகம்? எனது போன் எண்ணை நான் 25 வருடமாக பயன்படுத்தி வருகிறேன். என் இ-மெயில் முகவரியும் அனைவருக்கும் தெரிந்ததே. நான் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு மருத்துவரும் கூட. என்னை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசி கொண்டு தான் வருகிறார்கள். என்ன ஏமாற்று வேலை இது? இந்த பிரச்சனையை இதோடு முற்று புள்ளி வைக்க நான் விரும்புகிறேன். வளர்க்க விரும்பவில்லை.

ஆட்சி அமைக்க முடியாது

சகோதரர் கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த மாதிரியான அரசியல் நாகரீகமற்ற செயலை நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும் உங்கள் இணைய தளத்தில் யாரோ பதிவு செய்த அசிங்கமான வார்த்தைகள் உள்ளது. நீங்கள் இதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசன் கட்சியில் நான் ஏன் உறுப்பினராக வேண்டும்? சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். காட்டுகிறார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாவால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். பாரதிய ஜனதா தயவு இல்லாமல் தமிழகத்தில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

மத்திய அரசு தயார்

கன்னியாகுமரி பகுதியில் கடலுக்கு சென்ற 500 மீனவர்கள் மீண்டும் கரைக்கு வரவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறது. நேற்று முன்தினம் சோனியா காந்தி டெல்லியில் 20 கட்சி தலைவர்களுக்கு டீ-பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் சோனியா மகன், கலைஞர் மகள், லாலு மகன் இப்படி சிலர் தான் கலந்து கொண்டார்கள். இவர்களால் பாரதிய ஜனதா கட்சியின் உறுதி தன்மையை மாற்ற முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி ஆரம்பித்துவிட்டது என்று கூறி விட்டார். இந்த விசயத்தில் தேவையற்ற விவாதங்களை கிளப்ப வேண்டாம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து