முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்றம் 19-வது நாளாக முடங்கியது

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவை நடவடிக்கை தொடர்ந்து 19-வது நாளாக முடங்கியது.

2-வது கட்ட அமர்வு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு 5-ம் தேதி தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மக்களவை நேற்று கூடியதும்,  அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினையை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சி எம்.பிக்கள் எழுந்து நின்று அவை நடவடிக்கையை வேண்டும் என்றே அதிமுக முடக்குவதாக குற்றம் சாட்டினர்.

ராஜ்நாத்சிங் அறிக்கை

தொடர்ந்து அமளி நீடித்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடியதும், அமளி நீடித்தது. அமளிக்கு இடையே, நேற்று எஸ்.சி/ எஸ்.டி சட்ட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை அளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவையின் மையப்பகுதிக்கு வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

19-வது நாளாக...

மாநிலங்களவையிலும் இதே நிலை தான் நீடித்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றனர். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளின் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் 19-வது நாளாக முடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து