முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்தில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்த 14 பேருக்கு ரூ.4.44 கோடி ஊக்கத்தொகை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தை சேர்ந்த 5 விளையாட்டு வீரர்கள், ஒரு வீராங்கனை மற்றும் அவர்களது பயிற்றுநர்கள் 8 பேர் உள்பட மொத்தம் 14 பேருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

பல்வேறு திட்டங்கள்...

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கில், தமிழ்நாடு அரசு, பன்னாட்டு அளவிலும் அகில இந்திய அளவிலும், நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல், பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்றுநர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சதீஷ்குமாருக்கு...

அந்த வகையில், ஆஸ்திரேலியா நாட்டின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், மேசைப்பந்து ஆடவர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற சரத் கமலுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடி ரூபாயும், மேசைப்பந்து ஆடவர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற சத்யனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடி ரூபாயும்,

தீபிகா கார்த்திக்குக்கு...

மேசைப்பந்து ஆடவர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமல்ராஜூக்கு ஊக்கத் தொகையாக 50 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தீபிகா கார்த்திக்குக்கு உயரிய ஊக்கத் தொகையாக 60 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 30 லட்சம் ரூபாயும்,  பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 8 பேருக்கு ஊக்கத் தொகையாக 54 லட்சம் ரூபாயும்,  என மொத்தம் 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று 5 விளையாட்டு வீரர்கள், ஒரு  வீராங்கனை மற்றும் 8 பயிற்றுநர்கள் ஆகியோருக்கு வழங்கி வாழ்த்தினார்.

வீரர்கள் நன்றி...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனை மற்றும் பயிற்றுநர்கள் முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர். தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து