முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 30-லீக் போட்டி: 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் சி.எஸ்.கே முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புனே: வாட்சன், டோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை அணி.

பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரின் 30-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். சென்னை அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது.

வாட்சன் அரைசதம்
9-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 25 பந்தில் அரைசதத்தை கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. சென்னை அணி 102 ரன்கள் எடுத்திருந்த போது டு பிளிசிஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய வாட்சன் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரியுமாக அடித்தனர். இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில் அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.

212 ரன்கள் இலக்கு
இறுதியில், சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. டோனி 22 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, காலின் முன்ரோ இறங்கினர்.

4 விக்கெட்டுக்கு...
பிரித்வி 9 ரன்னிலும், காலின் முன்ரோ 26 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 13 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு விஜய் சங்கர் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் டெல்லி அணி 16 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்பாக ஆடிய ரிஷப் பந்த் 45 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் அரை சதமடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

சென்னை வெற்றி
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் ஆசிப் 2 விக்கெட்டும், நிகிடி, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து