முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை

வியாழக்கிழமை, 10 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

கோவிலாங்குளத்தில்...

தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் கடல் காற்று வீசச் தொடங்கியதும் வெப்பம் தணிகிறது. மற்ற மாவட்டங்களில் அவ்வப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

மழை நீடிக்கும்...

அதே போல் தமிழ்நாட்டில் அதிபட்சமாக திருத்தணியில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பம் கடுமையாக நிலவியது. இதற்கிடையே வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவியுள்ள மேக கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும் கோடை மழை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
பலத்த மழைக்கு...

அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் பல இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. மழைக்கு இன்னும் காத்து இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

தொடங்க வாய்ப்பு...

மார்ச் 1-ந்தேதியில் இருந்து இயல்பான அளவை தாண்டி மழை பெய்துள்ளது. இந்த கால கட்டத்தில் சராசரியாக 79.5 மி.மீ. மழை தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை 86 மி.மீ. மழை பெய்து கூடுதலாக 8 சதவீத மழை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிக்கு முன்பே தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக புனே வானிலை மையம் ஆய்வு செய்து தெரிவித்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

காற்றழுத்த தாழ்வு...

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து