முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 71, தமிழில் பிரபலமான எழுத்தாளரான பாலகுமாரன் எண்பதுகளில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள் போன்ற நாவல்கள் வாசகர்களிடையே அதிகமாக வாசிக்க பெற்றவையாகும். 200 நாவல்கள் 100 சிறுகதைகள் எழுதியிருக்கும் பாலகுமாரன், நடிகர் கமல் - பிரபுதேவா நடித்த காதலா காதலா, மகாகவி பாரதியின் வாழ்க்கைக்கதையை சொல்லும் பாரதி உள்ளிட்ட 23 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி, திருவிக விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகுமாரன் நேற்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் இரங்கல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-

புகழ் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களையும், பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலகுமாரன் எழுதிய மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் ஆகிய நாவல்கள் மிகவும்  பிரபலமானவை. பாலகுமாரன் சில தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனங்களையும் எழுதியுள்ளார். பாலகுமாரனுக்கு 16.1.2018 அன்று நடைபெற்ற விழாவில் அவருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது வழங்கியது இன்றும் பசுமையாய் எனக்கு நினைவில் இருக்கிறது.

பாலகுமாரன் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது போன்ற பல விருதுகளையும் தனது எழுத்துப் பணிக்காக பெற்ற பெருமைக்குரியவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், இலக்கியத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான. பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். பாலகுமாரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து