முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பங்கீட்டு குழுவிற்கு 'மேலாண்மை வாரியம்' என்று பெயர் சூட்ட மத்திய அரசு ஒப்புதல் 'இறுதி அதிகாரம் வாரியத்திற்கே' என்று திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காவிரி நீர் பங்கீட்டு குழுவிற்கு 'மேலாண்மை வாரியம்' என்று பெயர் சூட்ட சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 'இறுதி அதிகாரம் வாரியத்திற்கே' என்று திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வரைவு திட்டம்...
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு இரு முறை அவகாசம் கேட்ட நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் 16-ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் காவிரி வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார்.

கர்நாடகம் கோரிக்கை
கர்நாடகத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியான் திவான், கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடிந்திருப்பதால், அங்கு புதிய அரசு அமையாத சூழல் நிலவுகிறது, வரைவு செயல்திட்டம் குறித்து மற்ற மாநிலங்களைப் போல் நாங்களும் ஆலோசனை அளிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக இந்த வழக்கை நீங்கள் பலமுறை ஒத்தி வைத்துள்ளீர்கள். இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கப் போகிறது. இதில் நாங்களும் ஆக்கப்பூர்வமாக கருத்து கூற உரிமை இருக்கிறது. ஆதலால் போதுமான அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை நிராகரிப்பு
அப்போது தமிழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், கர்நாடகத்தில் அரசு செயல்படவில்லை என்று கூறுவது தவறு. ஜூலை மாதம்வரை நீதிமன்றம் காத்திருக்கக் கூடாது, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையே கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் வரைவு செயல் திட்டத்தில் திருத்தங்கள் செய்யக்கோரி ஆலோசனை அளித்திருந்தன. அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. அதேசமயம், ஜூலை மாதத்துக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

காவிரி வாரியத்திற்கே....
வரைவு செயல்திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால் இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற அம்சத்தையும் ஏற்க முடியாது. மத்திய அரசின் முடிவுக்கே கட்டுப்பட வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இறுதித் தீர்ப்பின்படி காவிரி நிதிநீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது, இறுதி முடிவும் காவிரி வாரியமே எடுக்க முடியும். மத்திய அரசுக்கு கிடையாது. நாங்கள் அளித்த தீர்ப்பை மத்திய அரசு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு விளக்கம்
இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்தியஅரசுக்கு இருந்தால், அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் என்று புதுச்சேரி அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மிஸ்ரா, மத்திய அரசின் இந்த அம்சம் இறுதித்தீர்ப்புக்கு எதிரானதாகும் என்றனர். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வேணுகோபால் பதில் அளிக்கையில், மத்திய அரசுக்கு இறுதி அதிகாரம் என்ற அம்சம் என்பது ஒரு பாதுகாப்பு வால்வு போன்றதாகும். காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு பணியாவிட்டால், ஆணையம் மத்திய அரசை நாடி அதன்மூலம் செயல்படுத்த வைக்கலாம் என்பதாகும் என்றார்.

கோரிக்கை ஏற்பு...
ஆனால், அதற்கு தமிழகத்தின் வழக்கறிஞர் சேகர் நாப்தே, ராக்கேஷ் திரிவேதி, ஜி.உமாபதி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 2-ம் கட்ட அதிகார அமைப்பு ஒன்று இருக்கத் தேவையில்லை. காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றனர். காவிரி மேலாண்மை அமைப்பு என்ற பெயருக்கு பதிலாக வாரியம் என்று பெயரை மாற்ற தமிழகம் விடுத்த கோரிக்கையை கர்நாடகமும், மத்திய அரசும் ஏற்றுக் கொண்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து