முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த அறிக்கை வருமாறு:-

ரூ.5 கோடி மதிப்பில்...

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்ந்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படைவசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986-ம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது. தற்போது இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டிடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சிகூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்படும்.

அங்கன்வாடி மையங்கள்

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய புதிய கட்டிடம் ஒன்று 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 46 ஆயிரத்து 397 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 860 அங்கன்வாடி மையக் கட்டிடங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய வகையிலான பழுதுகளை நீக்கி, சீர்படுத்துவதற்காக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 17 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.5 கோடி செலவு...

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளரச் செய்யவும், சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அரசு செயல்பட்டு வருகின்றது. அதன்தொடர்ச்சியாக, மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம்10,000/- ரூபாயிலிருந்து 14,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 1,129 சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 5 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

ரூ. 25 ஆயிரம் மானியம்...

மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருள் விற்பனை மையம் அமைக்க, அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி 25,000/- ரூபாய் மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, 100 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 301 சிறப்புப்பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11 ஆயிரத்து 948 மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு தற்போது மாதமொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியம் 650/- ரூபாயிலிருந்து 900/- ரூபாயாக உயர்த்திவழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சம்ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து