முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரையூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்

புதன்கிழமை, 13 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

    முதுகுளத்தூர்,- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் கிராமை சுயாட்சி இயக்கத்தின் கீழ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், பேரையூர் கிராமத்தில் கிராம சுயாட்சி  இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- மத்திய அரசு இந்திய அளவில் வளாந்து வரும் மாவட்டங்களாக 115 மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளது.  அதில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.  அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சியினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு  வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 34 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு,  அக்கிராமங்களில் கடந்த 14.04.2018 முதல் 05.05.2018 வரையிலான நாட்களில்  மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை நூறு சதவீதம் பயனாளிகளுக்கு கொண்டு சேர்த்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 அதனைத் தொடர்;ந்து, தற்போது இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் மீதமுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது.  இக்கிராமசபா கூட்டத்தின் வாயிலாக கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை, எளியவருக்கு விலையில்லாமல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மின் சிக்கனத்தினை ஏற்படுத்திடும் வகையில் பயனாளிகளுக்கு எல்இடி மின்விளக்குகள் வழங்கும் திட்டம், அனைவருக்கும் புதிய வங்கி கணக்கு துவங்கும் திட்டம், விபத்து காப்பீடு திட்டம், உயிர் காப்பீடு திட்டம், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு முறையான கால இடைவெளியில் தடுப்பூசி போடுவதற்கான மிஷன் இந்திரா தனுஷ் திட்டம், விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில்  விவசாயிகளின் ஆண்டு வருமானத்தினை இரட்டிப்பாக்குவதற்கு கிராம விவசாய இயக்கம் திட்டம், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை சீர்செய்து குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்துவதற்கான திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
 இதுதவிர கிராமப்புற பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கான குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தி தங்களது குடியிருப்புகளையும், சுற்றுப்புறத்தினையும் சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டும்.  அதேபோல குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும்.  முறைகேடான இணைப்புகள் மூலம் குடிநீர் எடுப்பதை தவிர்த்திட வேண்டும்.  அத்தகைய நிகழ்வுகள் ஏதேனும் இருப்பின் உரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.  நிலத்தடி நீர்; மட்டத்தினை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில்  பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன்,  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, வி.எஸ்.வெங்கடேஸ்வரன், வட்டாட்சியர் கா.முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து