முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: போலி பயிற்சியாளருக்கு 27 வரை நீதிமன்ற காவல்

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

கோவை: போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்துள்ள நரசீபுரத்தில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆலாந்துறையை அடுத்த நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த நல்லா கவுண்டரின் மகள் லோகேஷ்வரி(19) பி.பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் என்.எஸ்.எஸ். சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.

பேரிடர் காலங்களில் உயிர் பிழைப்பது குறித்த பயிற்சியின் போது, கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிப்பது தொடர்பான செய்முறை விளக்கம் நடத்தப்பட்டது. இதற்காக கீழே சிலர் வலையைப் பிடித்தபடி காத்திருக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கீழே குதித்தனர். அப்போது மாணவி லோகேஷ்வரி குதிக்கத் தயங்கியுள்ளார். உடனே பயிற்சியாளர்ஆறுமுகம் அவரைத் தள்ளி விட்டுள்ளார். இதில், அவரது தலை எதிர்பாராதவிதமாக முதலாவது மாடியின் சன் ஷேடு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்த சென்னை வண்டலூரைச் சேர்ந்த ஆறுமுகத்தை  கைது செய்தனர். விசாரணையில் ஆறுமுகம் போலிச் சான்றிதழ்களைக் காட்டி கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கோவையில் உள்ள 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலி பயிற்சியாளர் ஆறுமுகம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஆறுமுகத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து