முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நள்ளிரவில் காதலியை பார்க்க சென்ற காதலனுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு பெண் வீட்டாரே திருமணத்தை நடத்தி வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவில் ரகசியமாக நுழைந்த ஒருவரை திருடன் என நினைத்து பிடித்து வைத்தனர். ஆனால் அந்த வீட்டில் உள்ள தனது காதலியைப் பார்க்கவே அவர் அங்கு சென்றது தெரிய வந்ததால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

ரோடாஸ் மாவட்டம் மஹாராஜ் கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த விஷால் சிங் (எ) தேஜு ராணுவத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரில் (பராதி) உள்ள அவரது உறவினர் பிகாரி யாதவின் மகள் லட்சுமி குமாரியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த விஷால், கடந்த 11-ம் தேதி இரவு தனது காதலியின் வீட்டில் ரகசியமாக நுழைந்துள்ளார். அப்போது தரை தளத்தில் உள்ள அறையில் குமாரி மட்டும் இருந்துள்ளார். மற்றவர்கள் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். எனினும் விஷால் நுழைந்ததைப் பார்த்து விட்ட ஒருவர், திருடன் நுழைந்து விட்டதாக கூச்சலிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி விஷாலை பிடித்து அடிக்க முற்பட்டனர். அப்போது வேறு வழியின்றி விஷாலும் குமாரியும் காதலை ஒப்புக் கொண்டனர். எனினும், விஷாலை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு அவரது குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். விஷாலின் தாத்தாவும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான பஞ்சு யாதவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

இதனிடையே, இரண்டு ஊர்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விஷாலும், குமாரியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரி பிரமோத் குமார் சிங் கூறும் போது, விஷாலுக்கும் குமாரிக்கும் திருமணம் செய்த வைக்க இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களை வாழ்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து