முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து முறைப்படி திண்டுக்கல் பொறியாளரை திருமணம் செய்து கொண்ட ஜெர்மனி ஆசிரியை

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - இந்து முறைப்படி திண்டுக்கல் பொறியாளரை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதற்கு காரணம், வளர்ந்து விட்ட வல்லரசுகளாக விளங்கும் நாடுகளில் கூட இல்லாத கட்டுப்பாடு, ஒழுக்கம் இந்த திருமணத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தான் பல நாடுகளில் இல்லாத குடும்ப ஒற்றுமை, ஒருவனுக்கு ஒருத்தி, தன் குழந்தைகளுக்காக வாழும் நேர்மை போன்றவற்றைப் பார்த்து உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து வியந்து வருகின்றன. மேலும் நமது நாட்டு கலாச்சார முறைப்படி திருமணம் செய்யவும் விரும்புகின்றனர். ஏனெனில் தனது வாழ்க்கைத் துணை மூலம் தனது 2வது அத்தியாயம் தொடங்குகிறது என்பதையும், அதன் மூலம் உலகில் பல சாதனைகள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர். அதுபோன்ற ஒரு திருமணம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் நவீன் சேகரன். பொறியியல் பட்டதாரியான இவர் தனது படிப்பு மற்றும் வேலைக்காக ஜெர்மனியில் வசித்து வந்தார். அப்போது அதே நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான தெரசா ஹாபர்ள் என்ற ஆசிரியையை சந்தித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தெரசா அவரை திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் தனது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதுடன் ஒரேயொரு நிபந்தனையை விதித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரிலேயே இந்த திருமணம் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் இந்துமுறைப்படியே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நவீன் சேகரன் தனது காதல் குறித்து பெற்றோரிடம் கூறினார். நாடு கடந்து, மதம் கடந்து, உறவினர்களை கடந்து ஏற்பட்ட இந்த காதலுக்கு அவரது பெற்றோர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் மகனுக்காக ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்டது. திண்டுக்கல்லில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று கோலாகலமாக இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக ஜெர்மன், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஆண்கள் அனைவரும் வேட்டி, சட்டையுடனும், பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்தும், தலைநிறைய மல்லிகை ஞீ சூடியும் கலந்து கொண்டனர்.
இந்துக்கள் திருமண சடங்கில் நடைபெறும் சம்பவங்களான மாப்பிள்ளை காசியாத்திரை செல்வது, பெண்ணிற்கு காலில் மெட்டி அணிவிப்பது, அம்மி மிதித்து அருந்ததியைப் பார்ப்பது, தாய், தந்தைக்கு கால்களை கழுவி பாதஞீஜை செய்வது, சம்மந்திகள் மாலை மாற்றிக்கொள்வது போன்ற வைபவங்கள் ஐதீக முறைப்படி நடந்தன. வேதமந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை மங்கள திருநாணை மணப்பெண்ணின் கழுத்தில் அணிவித்த போது அவர்கள் மீது அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.
இந்த திருமணத்தைச் சேர்ந்த ஏராளமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. கலாச்சார முறைப்படி நடந்த இந்த திருமணம் தங்களை மிகவும் கவர்ந்ததாக பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து