முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் - விஜய் மல்லையா

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன், இந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் என்று விஜய் மல்லையா தெரிவித்தார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டியை காண தொழிலதிபர் விஜய் மல்லையா மைதானத்துக்கு வந்திருந்தார். அப்போது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் சார்பில் அவரிடம் எப்போது இந்தியா திரும்புவீர்கள் என்ற ரீதியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'அதை நிதிபதி தான் முடிவு செய்வார்' என்றார். மேலும், கிரிக்கெட் போட்டியின் போது எந்தவித நேர்காணலும் கொடுப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக பொதுத் துறை வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் சென்று விட்டார். வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, அவர் இந்தியா திரும்புவதற்கு மறுத்து வருகிறார்.

இதனிடையே, அவரை நாடு கடத்துமாறு லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை, மல்லையா எதிர்கொண்டுள்ளார். அவரது வங்கிக் கடன் மோசடி குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இப்போது அவர் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை, ரூ.9,999.07 கோடியாக உள்ளது. மல்லையாவின் கடன் மோசடி தொடர்பாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. மேலும், மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவையும் கருப்புப் பண தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளர் என அறிவித்து, அவரது சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது.

அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு விஜய் மல்லையா 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த 3-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து