முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை:தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தில் மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி சராசரியாக தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தின் மூலம் பிரதமர் மோடியை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

உடனடி நடவடிக்கை....பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களில் தொடர்  மின் உற்பத்தியை பராமரிக்க நாள் ஒன்றுக்கு சராசரியாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உடனடியாக தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை வழங்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும் ரயில்வே துறைக்கும் உத்தரவிடுமாறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் வலியுறுத்தியுள்ளார்.

மோசமாக்கி உள்ளது....மேலும், காற்றாலை மின் உற்பத்தியும் செப்டம்பர் மாத மத்தியில் முடிவடைவதால், மின் உற்பத்தி பாதிக்கும் என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது என்றும், உடனடியாக நிலக்கரி வழங்காவிட்டால் தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தினசரி 20 ரேக்குகள்...நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து குறைவான அளவே நிலக்கரி கிடைப்பதால் தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைந்து விட்டது என்பதையும் முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். தினசரி 20 ரேக்குகள் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 7 முதல் 8 ரேக்குகள் வரைதான் எங்களுக்கு நிலக்கரி கிடைக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து