முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கு: இடைத்தரகர் மைக்கேலை இந்தியா அனுப்ப துபாய் நீதிமன்றம் அனுமதி

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவரை விரைவில் இந்தியா அழைத்து வந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என தெரிகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்த போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம் மைக்கேலை வழக்கு விசாரணைக்காக துபாயில் இருந்து நாடு கடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து