முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துல்லியத் தாக்குதல் நினைவு தினம்:மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,துல்லியத் தாக்குதல் நினைவு தினத்தைக் கொண்டாட பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியதன் பின்னணியில் அரசியல் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்  தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ஆம் தேதிகளில் துல்லியத் தாக்குதல்களை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. அப்போது இந்திய ராணுவ வீரர்களால் பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அப்போது, உத்தரப் பிரதேச தேர்தலுக்காக ராணுவ வீரர்களின் தியாகத்தை மோடி தலைமையிலான மத்திய அரசும், பா.ஜ.க.வும் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இந்த துல்லியத் தாக்குதல் நடைபெற்று வரும் 29-ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 29-ஆம் தேதியை துல்லியத் தாக்குதல் தினமாக அனுசரிக்க யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினத்தில், என்.சி.சி. மாணவர்களை கொண்டு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ அதிகாரிகளை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  கூறுகையில்:"அனைத்து பல்கலைக்கழகங்களையும், துல்லியத் தாக்குதல் நினைவு தினத்தை கொண்டாடுமாறு யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளதன் பின்னணியில் அரசியல் இல்லை. அது தேசப் பற்று தான். அதனை கொண்டாட வேண்டும் என்கிற கட்டாயமோ, நிர்பந்தமோ கல்வி நிறுவனங்களுக்கு கிடையாது.

இந்த துல்லியத் தாக்குதலை அரசு அரசியலாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியது, முற்றிலும் தவறானது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபட்டுள்ள பாஜக கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை மட்டும் தான் வழங்கியுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சி என்றால், அவர்களுடைய முடிவை கட்டாயமாக்கி திணிப்பார்கள்.

பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை தான் வழங்கப்பட்டுள்ளது, இதில் எங்கே இருக்கிறது அரசியல்? இது அரசியல் அல்ல தேசப்பற்று. துல்லியத் தாக்குதல் குறித்தும், ராணுவ வீரர்கள் எவ்வாறு களப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து