முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகண்மாய் தண்ணீரை ஊருணிகளில் நிரப்புவது தொடர்பாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அதிகாரிகளுக்கு ஆலோசணை

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம்பெரியகண்மாயில் தேக்கிவைக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை நகரில் உள்ள ஊருணிகளில் நிரப்புவது தொடர்பாக அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் டாக்டர்மணிகண்டன் ஆலோசணை வழங்கினார்.
      ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊரணிகளில் பாதுகாப்பாக நிரப்புவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர்; தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக கடந்த ஆண்டு வைகை ஆறு பூர்வீக ஆயக்கட்டு பாசன கணக்கீட்டின்படி வைகை அணையிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தேன்.   அதன்படி, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 64 ஊரணிகளில் தண்ணீர்; நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.  அதேபோல இந்த ஆண்டிலும் வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தண்ணீரை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எனது சொந்த முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரிடத்தில் நேரடியாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 1.12 மீட்டர் (3.75 அடி) அளவில் சுமார் 221 மில்லியன் கனஅடி  தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.  இத்தண்ணீரை வீணாகாமல்  கடந்த ஆண்டைப் போல இந்தாண்டிலும் உரிய முறையில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊரணிகளில் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 இதற்கு ராமநாதபுரம் பெரிய கண்மாயில் உள்ள 8 பாசன மடைகளின் வாயிலாக ராமநாதபுரம் நகராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, போகலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரகப்பகுதிகளில் உள்ள ஊரணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு உரிய வரத்துக்கால்வாய்கள், சாலைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் பாலங்கள் ஆகியவை  சீரான முறையில் உள்ளதை வருவாய் கோட்டாட்சியர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோர் கள ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.   வரத்துக் கால்வாய்களில் உடைப்பு, தனிநபர்கள் மோட்டார்களைப் பயன்படுத்தி முறைகேடாக தண்ணீரைப் பயன்படுத்துவது போன்ற நிகழ்வுகளை நூறு சதவீதம் தவிர்த்திட வேண்டும் .   இதனை தொடர்ந்து கண்காணிப்பதற்கு  அலுவலர் குழு அமைத்திட வேண்டும். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும்,  தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக  வானிலை கணிப்புகள் உள்ளதாலும், ஒவ்வொரு ஊரணியிலும்  தண்ணீர் நிரப்பிடும் பொழுது சம்பந்தப்பட்ட ஊரணியின் கொள்ளளவில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவிற்கு மட்டும் நிரப்பிட வேண்டும்.  இதனால் திடீர் மழை போன்ற நேர்வுகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுத்திட முடியும்.  முதலில் ராமநாதபுரம் நகரின் பிரதான ஊரணிகளான முகவை ஊரணி, நீலகண்டி ஊரணி, லட்சுமிபுரம் ஊரணி, சிதம்பரம்பிள்ளை ஊரணி, அள்ளிக்கண்மாய் ஊரணி, நொச்சிவயல் ஊரணி போன்ற ஊரணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீரை நிரப்பிட வேண்டும். அதேவேளையில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் கூடுதலான ஊரணிகளில் தண்ணீர் நிரப்பிடும் வகையில் அலுவலர்கள் பணிகளை முறையாக ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
 
 இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வெங்கிடகிருஷ்ணன், ராமநாதபுரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் நடராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து