முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடா தொடர்பான தரவுகளை இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுங்கு விதித்திருந்த கெடுவை(அக்.15) நீட்டிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடா தொடர்பான தரவுகளை இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்' என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தியிருந்தது.

இந்த விதிமுறைக்கு எதிராக, அமெரிக்க பண பரிவர்த்தனை நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின. மேலும், அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜான் கார்னின், ஜனநாயகக் கட்சியின் எம்.பி. மார்க் வார்னர் ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்தக் கடிதத்தில் அவர்கள், "ரிசர்வ் வங்கியின் இந்த கொள்கை, இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் தாமதம் ஏற்படலாம்.

ஒரு நிறுவனம் தங்களது தகவல்களை உயர்தரமான பாதுகாப்பு சர்வரில் உள்நாட்டில் வைத்திருந்தாலும், அந்த தகவல்கள் பாதுகாப்புடன் இருக்குமா? என்பது கேள்விக் குறிதான். இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும், உள்நாட்டிலேயே தகவல்களை சேமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உள்நாட்டில் மட்டுமன்றி, வேறு எந்த இடத்திலும் தகவல்களை சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்க முடியும். இதுதொடர்பாக, இந்தியா, அமெரிக்கா நாடுகளின் சட்ட அமலாக்கத் துறை இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறுவதை வரவேற்கிறோம். எனவே, தகவல் சேமிப்புக் கொள்கை தொடர்பான விதிமுறைகளை தளர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று அந்தக் கடிதத்தில் அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே தரவுகளை சேமித்து வைக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு விதித்திருந்த கெடுவை நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து