முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முயற்சி கேரள முதல்வர் பினராய் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலையை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முயல்கிறது. பெண்களைச் செல்ல விடாமல் தடுத்து அவர்களின் உரிமையைப் பறிக்கிறது என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டினார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காரணம் காட்டி கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு திருப்பி அனுப்பி விடப்பட்டனர். இதனால், சபரிமலை கடந்த 5 நாட்களாக மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் பூஜைகள் முடிந்த கோயில் நடை நேற்று முன்தினம் சாத்தப்பட்டது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் கேரள அரசு செய்து விட்டது. கேரள அரசோ அல்லது போலீசாரோ சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை தடுக்க முயற்சிக்க முடியாது. ஆனால், பெண்கள் பக்தர்களைத் தடுத்து சபரிமலையை போர்க்களமாக்க ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது.கேரள வரலாற்றிலேயே ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தும் மனநிலை முதல் முறையாக இப்போதுதான் உருவாகி இருக்கிறது. சபரிமலையில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. சபரிமலை கோயிலை ஒரு போதும் போர்க்களமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதி கொள்கிறோம். சமீபத்தில் நடந்த சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் நான் நினைக்கவில்லை, சட்டம் ஒழுங்கு தோல்வி அடையவும் இல்லை.

சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் சபரிமலைப் பகுதியில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தனர். அவர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து பெண் பக்தர்களைத் தடுத்தனர். அவர்கள் நிச்சயம் பக்தர்கள் இல்லை. ஐயப்ப பக்தர்கள் போர்வையில் முகமூடி அணிந்தவர்கள். பெண்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடந்த சதிச் செயலாகும்.சபரிமலையில் ஏறத் தொடங்கியவுடன் அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பெண்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து, தாக்குதலை நடத்தியுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலை போர்க்களமாக மாற்ற வேண்டும் என்று சங் பரிவாரங்களின் திட்டமாகும். விரைவில் சபரிமலையில் முகாமிட்டுள்ள கிரிமினல்களையும், தாக்குதல் நடத்துபவர்களையும் அப்புறப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து