முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடங்கியதை அடுத்து, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி

நவம்பர் 1-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்க கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்க கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகிறது. இதே போல் இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மழை நீடிக்கிறது

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த  2 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையிலும் 2 நாட்களாக மழை நீடிக்கிறது. இதையடுத்து வடகிழக்கு பருவ மழை நேற்று தொடங்கியதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் இது குறித்து கூறியதாவது:-

மிதமான மழை...

வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் துவங்கியது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகள் ராயல்சீமா மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளில் துவங்கும். தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியானது தென் தமிழக பகுதிகளில் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புழலில் 11 செ.மீ. மழையும், கேளம்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 2 தினங்களை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மிதமான மழை பெய்யக் கூடும்.

கடலோர மாவட்ட...

கடலோர மாவட்டங்களில் ஓரிருமுறை கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு சிலமுறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த நீண்டகால வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் அளவு கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும்போது இயல்பான அளவு 44 செ.மீ என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இயல்பைவிட அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து