முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதனாக வாழ்வோம், ஒளிமிக்க வாழ்வை பெறுவோம் மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 292-வது குருமகா சன்னிதானம் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (மதுரை ஆதீனம்) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-துலா மாதத்தில்தான் தீபாவளி பண்டிகை வருகிறது. துலாம் என்றால் தராசு என்று அர்த்தம். லாபம், நஷ்டம், இன்பம், துன்பம் இவைகளை சமமாக கருத வேண்டும். அப்படி கருதினால்தான் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். தீப ஒளி மிளிரும். ஒருவரை ஒருவர் மதித்து பழகும் பண்பு வளர வேண்டும். நமது நாட்டில் வாழ்கின்ற தலைவர்களை மதித்து போற்றிட வேண்டும். ஒரு தலைவன் இன்னொரு தலைவனை மதிக்க வேண்டும். மரியாதை செய்தல் வேண்டும். துன்பத்தில், கஷ்டத்தில் மூழ்கும் போது அவர்களுக்கு ஆறுதலாக, வழிகாட்டியாக, ஒளியூட்டுபவராக இருக்க வேண்டும். நட்பு என்பதற்கும், அரசியல் என்பதற்கும் முடிச்சுப் போடக் கூடாது. நட்பு வேறு, அரசியல் வேறு. மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான் வரும். நிலையாமை என்ற இவ்வுலகில் அன்புடனும், பண்புடனும் வாழ வேண்டும். மனித வாழ்க்கை ஒரு பெரிய மலையைப் போன்று உயரமான, நிறைய படிக்கட்டுகளை கொண்டது.

இப்படிப்பட்ட படிக்கட்டுகளை மிகவும் கஷ்டப்பட்டு, நிதானத்துடனும், பொறுமையுடனும் ஏறினால் அங்கே ஜோதியை, தீப ஒளியை காணலாம். ஒளிமயமான வாழ்வை பெற முடியும். பதவி வரும் போது பணம் வரும் போது, நாம் இதற்கு முன்னாள் எப்படி இருந்தோம். என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பணிவும், பண்பும் மலரும். எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நன்மையே செய்ய வேண்டும். நன்மை செய்ய இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். அதுவே நன்மை செய்ததற்கு சமம். எந்த துறையானாலும் அங்கே உழைப்புக்கும், தொண்டுக்கும், தியாகத்திற்கும் உரிய மரியாதையை சிறப்பை வழங்கிட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உழைப்பு, தியாகம், தொண்டு இந்த வாசல்கள் அடைக்கப்படும். இதுவே இயற்கை நியதி. தினசரி தியானம் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானது. மனிதனாக வாழ்வோம். ஒளிமிக்க வாழ்வை பெறுவோம். அனைவருக்கும் ஆசீர்வாதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து