முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு டாக்டர் பட்டம்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹாவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

கவுரவ டாக்டர் பெற்ற மகிழ்ச்சியில் உள்ள அருணிமா சின்ஹா, இளைஞர்கள் தங்களுடைய இலக்கை அடைவதற்கு முழு முயற்சியுடன் ஈடுபட்டால், அவர்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார். கால்பந்து வீரரான அருணிமா சின்ஹா, ஒரு முறை ரயிலில் கொள்ளை முயற்சியை தடுக்க முயன்ற போது கொள்ளையர்களால் தூக்கி வெளியே வீசப்பட்டார். அதில், அவரது இடது கால் கடுமையாக சேதமடைந்ததால், முழங்காலுக்கு கீழே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. காயம் குணமடைந்த பிறகு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பாலிடம், மலையேறும் பயிற்சி பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு மே 21-ம் தேதி, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை (8,848 மீட்டர்) அடைந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனை மூலம், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் என்ற பெருமையைப் பெற்றார்.இதேபோல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயரமான சிகரங்களின் உச்சியை அடைந்தும் அருணிமா சின்ஹா சாதனை படைத்துள்ளார். இவருடைய சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து