முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,தமிழகத்தை அச்சுறுத்திய கஜா புயலால் நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனை அடுத்து இன்றும் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புயல்கள்... கடந்த பல வருடங்களாக பல்வேறு புயல்கள் தமிழகத்தை தாக்கியுள்ளன. குறிப்பாக வர்தா புயல், தானே புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்களால் நாகை, கடலூர்  உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சமீபத்தில் கூட ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது அனைவரும் அறிந்ததே. அப்போது தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டதும் அனைவரும் அறிந்த ஒன்று.

ஒரு வார காலமாக.... இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாகி இருப்பதாகவும், அதற்கு  கஜா என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த கஜா புயல் கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தை அச்சுறுத்தி வந்தது. ஆரம்பத்தில் இந்த புயல் சென்னை - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு புயலின் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்தன. புயல் இன்று கடக்கும், நாளை கடக்கும் என்றெல்லாம் தகவல் வெளியாகி பொதுமக்களை பீதிக்கு ஆளாக்கியது.

வானிலை மைய...இந்த நிலையில் கஜா புயல் நேற்று இரவு  7 மணியளவில் நாகையில் இருந்து 138 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், 16.8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த இந்த புயலின் வேகம் 11 கி.மீட்டராக குறைந்ததாகவும் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். அதன் பிறகு இந்த புயலின் வேகம் 10 கி.மீட்டராக குறைந்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் இரவு 8 மணியளவில் கஜா புயல் நாகையில் இருந்து 125 கி.மீ. தொலைவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

அவசர ஆலோசனை... இந்த புயலை முன்னிட்டு நாகை மாவட்ட கலெக்டர் அவசர ஆலோசனை நடத்தினார். எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். புயலின் தாக்கத்தால் திருவாரூர், மன்னார்குடி, நாகை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்ட ஆரம்பித்தது. இந்த புயலை முன்னிட்டு நாகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அறிவுரைகள்... புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புயலை முன்னிட்டு எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பது தொடர்பாக தமிழக அரசு ஒரு வீடியோவை வெளியிட்டது. பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளை செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைத்தார். இந்த புயலை முன்னிட்டு பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். திருத்துறைப்பூண்டியில் 2,207 பேரும், வேதாரண்யம் முகாமில் 2 ஆயிரம் பேரும் இப்படி ஆயிரக்கணக்கானோர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு பணிக்காக தயார் நிலையில் 4 கப்பல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடலூரிலும் மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். கஜா புயலை முன்னிட்டு எண்ணூரில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

கடல் கொந்தளிப்புடன்... இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் புயலின் வெளிப்பகுதி கரையை தொடத் தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். புயல் கரையை தொட தொடங்கியதால் நாகையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த புயலின் எதிரொலியாக நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். இந்த புயல் மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி வழியாக அரபிக் கடலை மெல்ல சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து