முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாதான் உங்கள் தலைவர்: பினராய் விஜயன் - எதிர்க்கட்சி தலைவர் வார்த்தைப் போர்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரள சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பினராய் விஜயனுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ரமேஷ் சென்னிதலாவுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

கேரளாவில் பா.ஜ.கவுக்கு ஆதரவாகச் செயல்படும் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு ராகுல் காந்தி தலைவர் இல்லை அமித்ஷாதான் தலைவர் என்று முதல்வர் பினராய் விஜயன் கடுமையாகப் பேசினார்.

கேரளாவில் நேற்று காலை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா எழுந்து பேசினார். அவர் பேசுகையில், மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் வல்சன் திலங்காரிக்கு அரசு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அதனால்தான் அவர் கடந்த மாதம் சபரிமலையில் 18 படிகளில் சுதந்திரமாகச் சென்றார் என்று கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பினராய் எழுந்து பதில் அளித்தார். அவர் பேசுகையில், பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. சட்டப்பேரவையின் வாயிலில் அமர்ந்து உங்கள் 3 எம்.எல்.ஏ.க்கள் தர்ணா செய்கிறார்கள். பா.ஜ.க.வினர் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துகிறார்கள். உங்களுக்கும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே உறவு இருப்பது தெளிவாக தெரிந்து விட்டது.

அனைவரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது. இப்போது உங்களின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. நீங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருக்கமாக இருப்பது தெளிவாகி விட்டது. சபரிமலை குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. உங்களின் கட்சிக்கு தலைவர் ராகுல் காந்தி அல்ல. அமித்ஷா தான் எனத் தெரிவித்தார். இந்தப் பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் கைதட்டி ஆதரித்தனர்.

இதையடுத்து, ரமேஷ் சென்னிதலா பேசுகையில், நாங்கள் சபாநாயகருக்கு ஒத்துழைக்கிறோம். சபரிமலையில் அறிவிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை அரசு திரும்பப் பெற்றால், உண்ணாவிரதம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தை கைவிடுவது குறித்துப் பேசுவோம் எனத் தெரிவித்தார். இதனால், காங்கிரஸ் கட்சி, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே வாக்குவாதம் அதிகரித்தது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் முன்பு சென்று கோஷமிட்டனர். இதையடுத்து, பேசிய சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், கேள்வி நேரம் என்பது விவாத நேரமாகிக் கொண்டிருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை இருக்கையில் அமரக் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சபாநாயகர் முன் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், அவையை 21 நிமிடங்கள் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து