முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசின் அனுமதி மட்டும் போதாது: காவிரி மேலாண்மை ஆணையத்தின்: அனுமதியையும் பெற வேண்டும்

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி மட்டும் போதாது, காவிரி ஆணையத்தின் ஒப்புதல் அவசியம் என்று காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது  கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.  ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.  மேகதாது பிரச்சனை குறித்து ஆணையத்திடம் தமிழகம் முறையிட்டது. மேலும் ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரானது என கூறி உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது.இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ம் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் அனைத்து  உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். காவிரி ஆணைய அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. சில விஷயங்களில் முடிவுகளை எடுத்துள்ளோம். இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது; காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெற்றிருக்கின்றன  மேகதாது குறித்த அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம்  அனுமதி வழங்கினால் தான் மேகதாது அணை கட்டமுடியும்.

மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்புகளை பதிவு செய்து உள்ளது. அவற்றை கவனத்தில் கொள்வோம். அணை திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கும். மத்திய நீர் வள ஆணையம் அதன் அதிகார வரம்பிற்குட்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து