முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு: ஜெயலலிதா காட்டிய வழியில் தேர்தல்களில் வெற்றிகளை குவிக்க அயராது பாடுபடுவோம் - நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சபதம்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று அவரது நினைவிடத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றி மலர்களை அம்மாவுக்கு  காணிக்கையாக்கிட அயராது உழைப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சபதம் ஏற்றனர்.

அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. அமைதி பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, வாலாஜா சாலை, அரசு விருந்தினர் மாளிகை, வழியாக மெரினா கடற்கரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த தனிமேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்  கொண்டனர்.

ஜெயலலிதா வழியில்...

துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அ.தி.மு.க.வினர் அனைவரும் திருப்பிக் கூறி உறுதிமொழி மேற்கொண்டனர்.

உறுதியின் விபரம் வருமாறு:-

அ.தி.மு.க.வின் காவல் தெய்வமாக விளங்கும் புரட்சித் தலைவியின் , மகத்தான தியாக வாழ்வு, கழகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும், கழகப் பொதுச் செயலாளராகவும், 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வறியாது உழைத்து கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்த, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் அம்மாவின் ஓங்கு புகழை எந்நாளும் பறைசாற்றிட உறுதி ஏற்கிறோம். கட்டுக்கோப்புடனும், கடமை தவறாமலும், கண்ணியத்துடனும், மக்களுக்குத் தொண்டாற்றுவது எப்படி என்பதை எல்லோருக்கும் தனது வாழ்வின் வழியாக எடுத்துரைத்த அற்புதமான அரசியல் ஞானி அம்மா புரட்சித் தலைவியால் வளர்த்தெடுக்கப்பட்டு ஆயிரம் ஆயிரம் காலத்துப் பயிராக வளர்ந்திருக்கும் அ.தி.மு.க, அம்மா காட்டிய வழியில் தொடர்ந்து பயணம் செய்திட, உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

37 தொகுதிகளிலும்....

தமிழ்நாட்டின் பெண்களும், முதியவர்களும், பிள்ளைகளும், பரிவுடன் பேணிக் காப்பாற்றப் படுவதற்காக, தொட்டில் குழந்தைத் திட்டத்தையும், விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக் கணினி போன்ற எண்ணிலடங்கா திட்டங்களையும் தந்து ஏழை, எளிய மக்களின் கண்ணீர் துடைத்த சாதனையாளர் புரட்சித்தலைவி, கழகப் பணிகளிலும், ஆட்சி நிர்வாகப் பணிகளிலும் அவர் காட்டிய வழியில் செயல்பட்டு, தமிழக தாய்க்குலத்திற்கும், முதியவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உறுதுணையாய் இருக்கும் வண்ணம் செயலாற்ற உறுதி ஏற்கிறோம்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வலுவுள்ளவையாகத் திகழ்ந்தால் மட்டுமே இந்திய தேசம் வலிமை பெற்றதாக விளங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். புரட்சித் தலைவி தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட, நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வலிமை படைத்த கட்சியாக விளங்க வேண்டும் என்று வியூகம் வகுத்து, தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அ.தி.மு.க.வை , நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய அம்மாவின் அரசியல் மதிநுட்பத்தையும், மாநில சுயாட்சி உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு பணியாற்றிட உறுதி ஏற்கிறோம்.

உலகே பாராட்ட ...

நம் புரட்சித் தலைவி. அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்களை இன்று இந்திய மாநிலங்கள் பலவும் பின்பற்றி அம்மாவுக்கு புகழ் சேர்க்கின்றன. அம்மாவின் இந்த மகத்தான பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அ.தி.மு.க.வை மென்மேலும் வலுப்படுத்த உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம். இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் இரவு, பகல் பாராமல், இந்திய நாடே வியக்கும் வகையில், உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டும் வண்ணம் செயல்பட்டவர் நம் புரட்சித் தலைவி.

சட்டமன்றத் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்றத் தேர்தல் என்று எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி ஈட்டியதற்கான அனைத்துப் பெருமைகளும் புரட்சித் தலைவியையே சாரும். அவரது உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து, அவர் காட்டிய வழியில் பணியாற்றி, எதிர்வரும் சட்டமன்ற இடைத் தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றி மலர்களை அம்மாவிற்கு காணிக்கையாக்கிட அயராது உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம். இவ்வாறு உறுதி மொழி ஏற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து