முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் விளையாடமாட்டராகள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று களமிறங்கவுள்ள இந்திய அணியின் 13 வீரர்களை கொண்ட பட்டியலை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் பெயர்கள் இடம் பெறவில்லை.

ரவீந்திர ஜடேஜா...

இதனையடுத்து இன்று நடைபெறவுள்ளப் போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

கணுக்காலில் காயம்

அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, பங்கேற்பதாக இருந்தது.  ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரை, முரளி விஜய்-க்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டின் அருகே வந்த பந்தை பிடிக்க முயன்றபோது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ரோகித் காயம்

இந்நிலையில் அவர் குணமாகிவிட்டார் என்று கூறப்பட்டது. பயிற்சியின் போது அவர் கலந்துகொண்டார். இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் வலைப்பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என்று தெரிகிறது.
அடிலெய்ட் டெஸ்டின் 5-வது நாளில் பீல்டிங்கின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. முதல் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால், இவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்திய அணியின் 13 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி விபரம்:

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

இதிலிருந்து 11 வீரர்கள் ஆஸி.க்கு எதிரான இன்றைய இரண்டாவது போட்டியில் சேர்க்கப்படுவார்கள்.

பெர்த் மைதான கண்ணோட்டம்

உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த் மைதானத்தில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோரது பேட்டிங்கும், ஆர்.பி.சிங், இர்பான்பதான், கும்ப்ளே ஆகியோரது பந்து வீச்சும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

இந்திய அணி பெர்த் மைதானத்தில் 3 டெஸ்டில் தோற்றுள்ளது. 1977-ம் ஆண்டு பி‌ஷன்சிங்பெடி தலைமையிலான அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும், 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான அணி 300 ரன் வித்தியாசத்திலும், 2012-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இன்னிங்சில் மற்றும் 37 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.

ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் 44 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றி பெற்றது. 11 டெஸ்டில் தோற்றது, 8 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 735 ரன் குவித்ததே (2003) இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 400 ரன் குவித்ததே அதிக பட்சமாகும். பாகிஸ்தான் 62 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். ஆஸ்திரேலிய அணி 76 ரன்னும், இந்தியா 141 ரன்னும் குறைந்தபட்சமாக எடுத்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து