முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, வணிக ரீதியாக சலுகை அளிக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் தாக்கலான அனைத்து  மனுக்களையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ. 58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும், விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ. 30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, ரபேல் விமானம் தொடர்பான விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, அந்த விமானத்தின் விலை விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, முத்திரையிட்ட உறையில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பித்திருந்தது. இது தொடர்பாக இருதரப்பு வாதங்களை சுப்ரீம் கோர்ட் பதிவு செய்து கொண்டது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஒப்பந்தத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் அதனை விசாரித்தது. ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான கொள்கை முடிவு, தொகை, ஒப்பந்ததாரர் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. வணிக ரீதியாக எந்த சலுகையும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை. ரபேல் ஒப்பந்தம் சரியானதுதான். திருப்தி அளிக்கிறது என்று தெரிய வந்திருப்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து