ஏமனில் அமெரிக்கா விமானங்கள் நடத்திய வான்தாக்குதல்: அல்-கொய்தா தளபதி பலி

வாஷிங்டன் : அமெரிக்க கடற்படையை சேர்ந்த யு.எஸ்.எஸ். கோல் என்ற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு ஏடன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் போது அல்-கொய்தா தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கடற் படைவீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். ஏமனை சேர்ந்த அல்-கொய்தா தளபதியான ஜமால் அல்-படாவி என்பவர் இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
அமெரிக்கா போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 1-ம் தேதி ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், யு.எஸ்.எஸ். கோல் போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய ராணுவம் நீதியை வழங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.