சிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில் 12 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டது

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பிரம்படி தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தியாவை சேர்ந்தவர் உதயகுமார் தட்சணாமூர்த்தி. இவர் சிங்கப்பூரில் தங்கி ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கியிருந்த குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி இவரை மாமா என அன்புடன் அழைத்து வந்தாள். ஆனால் இவரோ அவளை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம், சாக்லேட், பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர் அந்த சிறுமியை கற்பழித்தார். அவளை நிர்வாண போட்டோவும் எடுத்தார். அந்த சிறுமியை 2-வது திருமணம் செய்ய விரும்புவதாக தனது கர்ப்பிணி மனைவியிடம் தெரிவித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது சிங்கப்பூர் ஜுடிசியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பங் கஞ்ச் சயூ விசாரித்து தீர்ப்பளித்தார். அதில் சிறுமியை கற்பழித்த உதயகுமாருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். மேலும் 12 பிரம்படி தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.