Idhayam Matrimony

தமிழக மக்கள் ஒத்துழைப்புடன் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் தவிடு பொடி ஆக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய் செய்திகள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும் என்றும், உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது எத்தனை முறை கிராமங்களுக்கு சென்றார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள் எழுப்பி உள்ளார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சான்றோர்கள் சென்னதைப் போல தை பிறந்திருக்கின்றது, நமக்கு வழி பிறந்திருக்கின்றது.  இந்த நன்னாளில் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோருக்கு மணிமண்டபம், அந்த மணிமண்டபத்திலே அவர்களுடைய வெண்கல முழு உருவச்சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் இந்த விழாவில் மொத்தம் ரூ. 121 கோடியே 55 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் 53 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தும், ரூ. 8 கோடியே 94 இலட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 21 புதிய திட்டப் பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்திப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு, அந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.  எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, கிராமம், கிராமமாகச் சென்று, மக்களை சந்தித்து, குறைகளை நீக்கிய அரசு அம்மாவினுடைய அரசு.  அம்மாவினுடைய ஆணையை ஏற்று நாங்களெல்லாம் ஏற்கனவே கிராமம், கிராமமாக சென்று அந்த கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையறிந்து, அதை உடனுக்குடன் அம்மாவிடத்திலே தெரிவித்து, அவர்களுடைய குறையை நிறைவேற்றியிருக்கின்றோம்.  அம்மாவின் மறைவிற்குப் பிறகும், அதையே தொடர்ந்து இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.  அனைத்து மக்களுடைய அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகின்ற அரசு அம்மாவினுடைய அரசு.  நீங்கள் கிராமம், கிராமமாக போனாலும் சரி, நடைபயணம் மேற்கொண்டாலும் சரி.  அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு தந்திருக்கின்றது.  அவர்(ஸ்டாலின்)உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது கிராமப்புற, நகரப்புற மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற பொறுப்பு அவருக்கு இருந்தது.  அப்பொழுது, எத்தனை கிராமத்திற்கு நீங்கள்(ஸ்டாலின்) சென்றீர்கள்? எத்தனை மக்களை பார்த்தீர்கள்? எத்தனை மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொடுத்தீர்கள்? எதையும் செய்யவில்லை, இதெல்லாம் போலி விளம்பரம். இவர் ஆட்சியில், பதவியில் இருந்த பொழுது, எனக்குத் தெரிந்த அளவில் இவர் கிராமத்திற்கு சென்றது போல் தெரியவில்லை.  மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் எத்தனை கிராமங்களுக்கு வந்திருக்கிறார்? ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுதே மக்களை பார்க்கவில்லை, இப்பொழுது எதிர்க்கட்சியாகி மூன்று வருடங்கள் ஆகிறது. எங்கு போய் மக்களை பார்த்தீர்கள்? இப்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, இவர்கள் கிராம சபை கூட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை எந்த அரசியல் தலைவராலும் ஏமாற்ற முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.  மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர். கட்சியை துவக்கியதற்கு காரணமே கிராமத்திலே இருந்து நகரம் வரை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சேரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க. மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கின்றோம். இருபெரும் தலைவர்கள் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறார்கள்.  இந்த ஆட்சியில் எதுவும் கிடைக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

மருத்துவத் துறையிலே எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறது.  இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு இறந்தவரது கைகளை எடுத்து பொருத்தி, அரசு மருத்துவமனை ஒரு சாதனை படைத்திருக்கிறது.

கால்நடைகள் வளர்ப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே கால்நடை மருந்தகங்களை அம்மா அரசு செய்து கொடுத்திருக்கிறது.  ஏழை, எளிய தாய்மார்கள் கோழி வளர்க்க வேண்டும் என்பதற்காக கோழி கொடுக்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு அம்மாவின் அரசுதான் சாதனைகளை செய்துகொண்டிருக்கிறது.  இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, பொய்யான செய்தியை இன்றைக்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையையும், உங்களுடைய(தமிழக மக்களின்) மகத்தான ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து