முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா கூட்டிய மாநாட்டில் மோடிக்கு எதிராக தலைவர்கள் ஆவேச பேச்சு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த மாநாட்டில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசினர். 

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு முயற்சியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி , சத்ருகன் சின்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் யஷ்வந்த் சின்கா பேசும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு எதிராக மட்டுமே மோதிக் கொண்டு இருப்பதாக கூறுவார்கள். இது அதிகாரத்தில் இருந்து ஒருவரை இறக்குவது பற்றி அல்ல. நாம் ஒரு சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்காக ஒன்றுசேர்ந்து வந்துள்ளோம் என்று கூறினார்.
அசாம் முன்னாள் முதல்வர் ஜிகாங் அபாங் பேசும் போது, மாநிலம் மோசமான கட்டத்திற்கு செல்கிறது. சி.பி.ஐ. அவர்கள் கைப்பாவையாக உள்ளது. குடியுரிமை மசோதா காரணமாக வடகிழக்கு பற்றி எரிகிறது. டெல்லியில் உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள், இந்த பேரணி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கட்டும் என்று தெரிவித்தார். 

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பேசும் போது, நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. அனைத்து கட்சிகளும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ தோற்கடிக்க ஒன்றாக வர வேண்டும் என்று கூறினார். ஹிருத்திக் படேல் பேசும் போது, சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிசாரை எதிர்த்து போராடினார். நாங்கள் திருடர்களை எதிர்த்து போராடுகிறோம் என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜோரி, வேறு எந்த அரசாங்கமும் இதைப் போன்ற மக்களுக்கு பொய் கூறியதில்லை, கர்நாடகத்தில் நடப்பது போன்று பாராளுமன்ற தேர்தலிலும் நடக்கும், எனவே நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் கவனம் இருக்கட்டும். ஒன்றுபட வேண்டும். அர்ஜுனனைப் போல 2019 வாக்கெடுப்பில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் . ஒவ்வொரு பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்க வேண்டும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து