முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச சிறப்புகள்!

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

தைப்பூச நாளில்தான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. தைப்பூசத் திருவிழா, முருகப் பெருமான் அருள்புரியும் திருத்தலங்களில் போற்றப்படுவதற்குக் காரணம், ஒரு தைப்பூச நட்சத்திரத்தன்றுதான் முருகப் பெருமான் வள்ளியை மணந்து கொண்டார். சூரனை அழிப்பதற்காக சக்தியானவள், தன் ஆற்றல் முழுவதையும் கொண்டு சக்திவேலை உருவாக்கி முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூசம். முருகன் பெற்ற வேல் 'பிரம்ம வித்யா' சொரூபமானது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்கள் தேவாரப் பதிகங்களில் தைப்பூசத்தன்று திருவிடைமருதூரில் புனித நீராடுவதன் சிறப்பைக் குறித்துப் பாடி இருக்கிறார்கள்.

திருநெல்வேலி தலத்தில் பராசக்தி தாமிரபரணியில் நீராடி தவமிருந்து தைப்பூசத் திருநாளில் இறைவனின் அருள் பெற்றாள். தைப்பூசத்தன்று வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத் தினத்தில், ஆறு திரைகளை பாதியளவு நீக்கி, வள்ளலார் நிறுவிய நிலைக் கண்ணாடி முன்பு ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத் தினத்தன்று மட்டுமே ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு அனைவரும் முழுமையாக ஜோதி தரிசனம் காண வழி செய்யப்படுகிறது. தைப்பூச நன்னாளில்தான் ரங்கம் ரங்கநாதப் பெருமாள், தன் தங்கை சமயபுரத்து அம்மனுக்குக் காவிரிக் கரையில் தகுந்த மரியாதையுடன் சீர்வரிசை கொடுப்பார்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாட்கள் திருவிழா, அம்மன் புறப்பாடு அனைத்தும் நடைபெறும். பூச நட்சத்திரத்தின் பிரதான தேவதை குருபகவான். கோள்களில் ஞானம் தருபவர் குருபகவான். அதுபோல் நட்சத்திரங்களிலும், பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆதலால், தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், குருபகவானாகிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான தட்சிணாமூர்த்தியையும் வழிபடுதல் போற்றப்படுகிறது.

தைப்பூசத்தன்று பழநி திருத்தலத்தில் அபிஷேக, ஆராதனைகளைத் தரிசிப்பதால் நம் பாவங்கள் விலகும். தைப்பூச நன்னாளில்தான் திருஞானசம்பந்தர், பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து பூம்பாவையை எழுந்து வரும்படி பதிகம் பாடி உயிர்ப்பித்தார் (மயிலாப்பூரில் இந்த நிகழ்வு நடந்ததாக 'மயிலை கபாலீஸ்வரர் தல புராணம்' சொல்கிறது).

தைப்பூச புனித நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். தைப்பூசத் திருநாள் முருகப் பெருமானுக்கு உரியதாகப் போற்றப்பட்டாலும், தில்லைவாழ் நடராஜப் பெருமானுக்கும் உரிய நாள் என்பதை புராணம் விளக்குகிறது.

ஆதிகாலத்தில் புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் நடனம் ஆடினார் சிவபெருமான். அதுவே, ஆனந்த நடனம் ஆகும். இந்த அற்புதமான நிகழ்வு, சிதம்பரத்தில் தை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய பூசத் திருநாளில் நடந்ததாகப் புராண வரலாறு சொல்லும். இன்றும் சிதம்பரத்தில் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் பிரமாதப்படுகிறது.

அன்னை சிவகாமசுந்தரியுடன் இறைவன் எழுந்தருளி நடனமாடும்போது வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி ஆகிய மூவரின் சிலைகள் ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்திருப்பார்கள். தைப்பூசத் திருநாளில் தில்லை சிவகங்கை தீர்த்தக் கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தத் திருக்காட்சியைத் தரிசிப்பது மிகவும் போற்றப்படுகிறது. தைப்பூச விழாவை முன்னிட்டு 'நாட்டியாஞ்சலி' விழா சிதம்பரத்தில் பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழா தைப்பூசத்தன்று நிறைவு பெறும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து