முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை - பிரதமர் மோடி - முதல்வர் எடப்பாடி கொடியசைத்து தொடங்கிவைத்தனர் - திருப்பூரில் காணொலி காட்சி மூலம் நடந்த கோலாகல விழா

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பூரில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையேயான 22- கிலோ மீட்டர் தூரத்திற்கு 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்தன.

மொத்தம் 45 -  கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சென்டிரலில் இருந்து விமானநிலையம் வரையிலும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும் ஏற்கனவே ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மீதம் உள்ள வழித்தடத்தில் சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமை அடைந்துள்ளன.

7 ரயில் நிலையங்கள்

இதில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல் 2-ம் அடுக்கு, ஐகோர்ட், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 7 ரயில் நிலையங்கள் உள்ளன. மொத்தத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 19 ஏ.சி. சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் பாதுகாப்புக்காக பிளாட்பாரம் மேடை திரைக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முழுமை அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று மாலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

திருப்பூரில் விழா

இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரெயில் நிலையங்களையும் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு மோடி வணக்கம் தெரிவித்தார். பிரதமர்மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார். திருப்பூரில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் ரயிலில் பயணம்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இதற்கான விழாவில் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி,மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு காணொளிகாட்சிமூலம் மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதன்பின்னர் சென்னை சென்னை சென்ட்ரலில் இருந்து வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ் வரை மெட்ரோ ரயிலில் அமைச்சர்கள் பயணம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும்,ரூ.393 கோடி செலவில் சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அத்துடன் திருப்பூரில் 7.40ஏக்கரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டினார். சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திருச்சி விமான நிலையம் 951 கோடியே 28 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கட்டிடமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு 48 ‘செக்–இன்’ கவுண்டர்கள், ஆயிரம் கார்கள் நிறுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் 2 ஆயிரத்து 467 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது. 140 ‘செக்–இன்’ கவுண்டர்கள், 2 ஆயிரம் கார்கள் நிறுத்த பல அடுக்கு மாடிகள் ஏற்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து