முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இன்று ரதசப்தமி விழா 7 வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருகிறார்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இன்று  ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதிஉலா நடக்கின்றன.அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். எனவே இதுஒரு ‘‘மினி பிரம்மோற்சவ விழா’’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.
முதலில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதயமாகும் நேரத்தில், ‘‘சூரிய ஜெயந்தி விழா’’ நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து, கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்படுவார்.

சூரியக்கதிர்கள் உற்சவர் மீது விழும். அந்த நேரத்தில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். இதையடுத்து சூரிய பிரபை வாகன உலா நான்கு மாடவீதிகளில் வலம் வரத் தொடங்கும். மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோ‌ஷத்துடன் வழிபடுவர்.

வாகன வீதிஉலாவை பார்க்க லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கோவிலின் நான்கு மாடவீதிகளில் 175 கேலரிகளை சீரமைத்து, தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. கேலரிகளில் அமர்ந்து காலை முதல், இரவு வரை வாகன வீதிஉலாவை பார்த்து வழிபடும் பக்தர்களுக்குச் சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாடவீதிகளில் 55 உணவுக்கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து கேலரிகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம், குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்படும். பனி மற்றும் வெயிலுக்காக பக்தர்களின் நலன் கருதி தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் நேரத்தில் பக்தர்கள் மாடவீதிகளில் நடக்கும்போது, தரை சுடாமல் இருக்க, ‘கூல் பெயிண்ட்’ அடிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களை கவரும் வகையில் மாடவீதிகளில் பல்வேறு இடங்களில், ‘ரங்கோலி கோலம்’ வரையப்பட்டுள்ளது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள் வரிசையாக கொண்டு செல்லப்படும். திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரி‌ஷத் திட்டம் சார்பில் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து