பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தரும் தேதியில் மாற்றம்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை தரும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம்...
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகம் வந்த மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதன்பின்னர் கடந்த 10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மேலும், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
மார்ச் 1-ம் தேதி...
அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மோடி, கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.